< சங்கீதம் 8 >

1 கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் பாடல். எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். 2 விரோதியையும், பழிகாரனையும் அடக்கிப்போட, தேவனே நீர் உம்முடைய எதிரிகளுக்காக குழந்தைகள் பாலகர்கள் வாயினால் பெலன் உண்டாக்கினீர். 3 உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும், நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, 4 மனிதனை நீர் நினைக்கிறதற்கும், மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். 5 நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும், மரியாதையினாலும் அவனை முடிசூட்டினீர். 6 உம்முடைய கைகளின் செயல்களின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து. 7 ஆடுமாடுகள் எல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், 8 ஆகாயத்துப் பறவைகளையும், கடலின் மீன்களையும், கடல்களில் வாழ்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். 9 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!

< சங்கீதம் 8 >