< சங்கீதம் 61 >

1 நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு, என்னுடைய விண்ணப்பத்தைக் கவனியும். 2 என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும். 3 நீர் எனக்கு அடைக்கலமும், எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர். 4 நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்; உமது இறக்கைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா) 5 தேவனே, நீர் என்னுடைய பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது பெயருக்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர். 6 ராஜாவின் ஆயுசு நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். 7 அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும். 8 இப்படியே தினமும் என்னுடைய பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது பெயரை என்றைக்கும் புகழ்ந்து பாடுவேன்.

< சங்கீதம் 61 >