< சங்கீதம் 52 >

1 இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல், “தாவீது அகிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான்” என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறியபோது பாடப்பட்ட பாடல். பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளும் உள்ளது. 2 நீ கேடுகளைச் செய்ய திட்டமிடுகிறாய், கபடுசெய்யும் உன்னுடைய நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது. 3 நன்மையைவிட தீமையையும், யாதார்த்தம் பேசுகிறதைவிட பொய்யையும் விரும்புகிறாய். (சேலா) 4 கபடமுள்ள நாவே, அழிக்கும் எல்லா வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்; 5 தேவன் உன்னை என்றென்றைக்கும் இல்லாதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் குடியிருப்பிலிருந்து பிடுங்கி, நீ உயிருள்ளோர் தேசத்தில் இல்லாதபடி உன்னை அழித்துப்போடுவார். (சேலா) 6 நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப் பார்த்து சிரித்து: 7 இதோ, தேவனைத் தன்னுடைய பெலனாக கருதாமல், தன்னுடைய செல்வப்பெருக்கத்தை நம்பி, தன்னுடைய தீமையில் பலத்துக்கொண்ட மனிதன் இவன்தான் என்பார்கள். 8 நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன். 9 நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது பெயருக்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாக இருக்கிறது.

< சங்கீதம் 52 >