< சங்கீதம் 39 >

1 எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல். என்னுடைய நாவினால் பாவம்செய்யாதபடிக்கு நான் என்னுடைய வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்கும்வரை என்னுடைய வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன். 2 நான் மவுனமாகி, ஊமையனாக இருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என்னுடைய துக்கம் அதிகரித்தது; 3 என்னுடைய இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கும்போது நெருப்பு எரிந்தது; அப்பொழுது என்னுடைய நாவினால் விண்ணப்பம் செய்தேன். 4 யெகோவாவே, நான் எவ்வளவாக நிலையற்றவன் என்று உணரும்படி என்னுடைய முடிவையும், என்னுடைய நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். 5 இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்; என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது; எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா) 6 நிழலைப்போலவே மனிதன் நடந்து திரிகிறான்; வீணாகவே சஞ்சலப்படுகிறான்; சொத்தைச் சேர்க்கிறான். யார் அதை எடுத்துக்கொள்ளுவான் என்று அறியான். 7 இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என்னுடைய நம்பிக்கை. 8 என்னுடைய மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், மூடனின் அவமானப்படுத்துதலுக்கு என்னை ஒப்புக்கொடுக்க வேண்டாம். 9 நீரே இதைச் செய்தீர் என்று நான் என்னுடைய வாயைத் திறக்காமல் மவுனமாக இருந்தேன். 10 ௧0 என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமது கையின் அடிகளால் நான் சோர்ந்து போனேன். 11 ௧௧ அக்கிரமத்திற்காக நீர் மனிதனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவத்தைப் பூச்சி அரிப்பதுபோல அழியச்செய்கிறீர்; நிச்சயமாக எந்த மனிதனும் மாயையே. (சேலா) 12 ௧௨ யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டு, என்னுடைய கூப்பிடுதலை காதுகொடுத்து கேளும்; என்னுடைய கண்ணீருக்கு மவுனமாக இருக்கவேண்டாம்; என்னுடைய முன்னோர்கள் எல்லோரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் நிலையற்றவனுமாக இருக்கிறேன். 13 ௧௩ நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாக இரும்.

< சங்கீதம் 39 >