< சங்கீதம் 101 >

1 தாவீதின் பாடல். இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; யெகோவாவே, உம்மை புகழ்ந்துபாடுவேன். 2 உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என்னுடைய வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன். 3 தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது. 4 மாறுபாடான மக்கள் என்னைவிட்டு விலகவேண்டும்; பொல்லாதவனை ஏற்கமாட்டேன். 5 பிறனை இரகசியமாக அவதூறுசெய்கிறவனை அழிப்பேன்; பெருமைக் கண்ணனையும் திமிர்பிடித்த மனப்பான்மை உள்ளவனையும் பொறுக்கமாட்டேன். 6 தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடு குடியிருக்கும்படி என்னுடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் எனக்கு ஊழியம்செய்வான். 7 கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என்னுடைய கண்முன் நிலைப்பதில்லை. 8 அக்கிரமக்காரர்கள் ஒருவரும் யெகோவாவுடைய நகரத்தில் இல்லாதபடி வேர் அறுக்கப்பட்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அதிகாலமே அழிப்பேன்.

< சங்கீதம் 101 >