< நீதிமொழிகள் 17 >

1 சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம்.
சண்டை நடக்கும் ஒரு வீட்டின் நிறைவான விருந்தைவிட, சமாதானத்துடன் அமைதியாய் சாப்பிடும் காய்ந்த அப்பத்துண்டே சிறந்தது.
2 புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான்.
விவேகமுள்ள வேலைக்காரன் அவமானத்தைக் கொண்டுவருகிற மகனை ஆளுவான், பின்பு அந்த வேலைக்காரன் குடும்பத்தில் ஒருவனைப்போல் சகோதரருடைய உரிமைச் சொத்திலும் பங்குபெறுவான்.
3 வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா.
வெள்ளியை உலைக்கலமும் தங்கத்தை சூளையும் சோதிக்கும், ஆனால் இருதயத்தை சோதிக்கிறவர் யெகோவா.
4 தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
கொடியவர்கள் தீமையான பேச்சை ஆர்வமாய்க் கேட்கிறார்கள்; பொய்ப் பேசுபவர்கள் அவதூறைப் பேசும் நாவைக் கவனித்துக் கேட்கிறார்கள்.
5 ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்; ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
ஏழைகளை ஏளனம் செய்பவர்கள் அவர்களை படைத்தவரையே அவமதிக்கிறார்கள்; பிறரின் துன்பத்தைக் கண்டு மகிழ்பவர்கள் தண்டனைக்குத் தப்புவதில்லை.
6 பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே.
பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்கு மகுடம்; பிள்ளைகளுக்குப் பெருமை அவர்களின் பெற்றோர்களே.
7 மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது.
சொல்திறமைமிக்க உதடுகள் மூடர்களுக்குப் பொருத்தமற்றது; அப்படியானால் பொய்பேசும் உதடுகள் ஆளுநருக்கு எவ்வளவு கேவலமானது!
8 லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்; அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
இலஞ்சத்தைக் கொடுப்பவனுக்கு அது வசியம் போலிருக்கிறது; அவன் செல்லும் இடமெல்லாம் வெற்றி என நினைக்கிறான்.
9 குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.
குற்றத்தை மன்னிக்கிறவர்கள் அன்பை தேடுகிறார்கள்; ஆனால் குற்றத்தை மீண்டும் நினைப்பூட்டுகிறவர்கள் நெருங்கிய நண்பர்களையும் பிரித்துவிடுகிறார்கள்.
10 ௧0 மூடனை நூறடி அடிப்பதைவிட, புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும்.
மூடருக்கு நூறு அடி கொடுப்பதைவிட பகுத்தறிகிறவர்களை வார்த்தையினால் கண்டிப்பதே பயனளிக்கும்.
11 ௧௧ தீயவன் கலகத்தையே தேடுகிறான்; கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
தீமை செய்பவர்கள் கலகத்தையே தேடுகிறார்கள்; அழிவின் தூதனால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
12 ௧௨ தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட, குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல்.
தன் மூடத்தனத்தில் சிக்கிய முட்டாளைச் சந்திப்பதைவிட, தன் குட்டியைப் பறிகொடுத்த கரடியைச் சந்திப்பது சிறந்தது.
13 ௧௩ நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.
ஒருவர் நன்மைக்குப் பதில் தீமை செய்தால், அவருடைய வீட்டைவிட்டு தீமை ஒருபோதும் விலகாது.
14 ௧௪ சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு.
வாக்குவாதத்தைத் தொடங்குவது அணையை உடைத்துவிடுவது போலாகும்; எனவே விவாதம் ஏற்படும் முன்பே அதைவிட்டு விலகு.
15 ௧௫ துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.
குற்றவாளியை விடுதலை செய்கிறதும் குற்றமற்றவரை தண்டனைக்கு உள்ளாக்குகிறதுமான இரண்டையும் யெகோவா அருவருக்கிறார்.
16 ௧௬ ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.
மூடர் கையில் பணம் இருந்து என்ன பயன்? ஞானத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு மனமில்லையே.
17 ௧௭ நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
நண்பன் எக்காலத்திலும் அன்பாயிருக்கிறான்; இக்கட்டு காலத்தில் உதவி செய்யவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
18 ௧௮ புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான்.
மதியீனர் கடனுக்காக உத்திரவாதம் கொடுத்து, தன் அயலாரின் கடன்களுக்கான பாதுகாப்பு உறுதியளிக்கிறார்கள்.
19 ௧௯ விவாதப்பிரியன் பாவப்பிரியன்; தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
வாக்குவாதத்தை விரும்புகிறவர்கள் பாவத்தை விரும்புகிறார்கள்; வாசலை உயர்த்திக் கட்டுகிறவர்கள் அழிவையே அழைக்கிறார்கள்.
20 ௨0 மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
தீமையான இருதயமுள்ளவர்கள் நன்மையைக் காண்பதில்லை; பொய் நாவுள்ளவர்கள் துன்பத்தில் வீழ்கிறார்கள்.
21 ௨௧ மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
முட்டாளைப் பெற்றவருக்கு வருத்தம்; இறைவனற்ற மதியீனரின் பெற்றோருக்கு மகிழ்ச்சியில்லை.
22 ௨௨ மனமகிழ்ச்சி நல்ல மருந்து; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும்.
மகிழ்ச்சியான இருதயம் நல்ல மருந்து, ஆனால் நொறுங்கிய ஆவி எலும்புகளை உலரப்பண்ணுகிறது.
23 ௨௩ துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான்.
கொடியவர்கள் இரகசியமாக இலஞ்சம் வாங்கி, நீதியின் வழியைப் புரட்டுகிறார்கள்.
24 ௨௪ ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும்.
பகுத்தறிவு உள்ளவர்கள் ஞானத்தில் கண்ணோக்கமாய் இருப்பார்கள்; ஆனால் மூடரின் கண்களோ பூமியின் கடைசிவரை அலைகிறது.
25 ௨௫ மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
மதிகெட்ட பிள்ளையால் தன் தந்தைக்குத் துன்பமும், தன்னைப் பெற்றவளுக்குக் கசப்பும் இருக்கும்.
26 ௨௬ நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
குற்றமற்றவரைத் தண்டிப்பது நல்லதல்ல, உத்தமமான அதிகாரிகளை தண்டிப்பதும் நல்லதல்ல.
27 ௨௭ அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
அறிவுள்ளவர்கள் வார்த்தைகளை அடக்குகிறார்கள்; புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் சாந்தமாயிருக்கிறார்கள்.
28 ௨௮ பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
அமைதியாக இருந்தால், மூடரும் ஞானமுள்ளவர் என்று எண்ணப்படுவர்; தன் நாவை அடக்கினால் புத்திமான்களாகவும் தோன்றுவார்கள்.

< நீதிமொழிகள் 17 >