< எண்ணாகமம் 17 >

1 பின்பு யெகோவா மோசேயை நோக்கி: 2 “நீ இஸ்ரவேல் மக்களோடு பேசி, அவர்களுடைய பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பெயரை எழுது. 3 லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பெயரை எழுதவேண்டும்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத்தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும். 4 அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் இடமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கவேண்டும். 5 அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் மக்கள் உங்களுக்கு விரோதமாக முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியச்செய்வேன்” என்றார். 6 இதை மோசே இஸ்ரவேல் மக்களோடு சொன்னான்; அப்பொழுது அவர்களுடைய பிரபுக்கள் எல்லோரும் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி ஒவ்வொரு பிரபுவுக்கு ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள்; ஆரோனின் கோலும் அவர்களுடைய கோல்களுடனே இருந்தது. 7 அந்தக் கோல்களை மோசே சாட்சியின் கூடாரத்திலே யெகோவாவுடைய சமுகத்தில் வைத்தான். 8 மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்திற்குள் நுழைந்தபோது, இதோ, லேவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது. 9 அப்பொழுது மோசே யெகோவாவுடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள். 10 ௧0 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரர்களுக்கு விரோதமான அடையாளமாவதற்காக, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டு போய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாக முறுமுறுப்பதை ஒழியச்செய்வாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள்” என்றார். 11 ௧௧ யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான். 12 ௧௨ அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: “இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லோரும் அழிந்துபோகிறோம். 13 ௧௩ யெகோவாவின் வாசஸ்தலத்தின் அருகில் வருகிற எவனும் சாகிறான்; நாங்கள் எல்லோரும் சாகத்தான் வேண்டுமோ” என்றார்கள்.

< எண்ணாகமம் 17 >