< யோசுவா 2 >

1 நூனின் மகனாகிய யோசுவா சித்தீம் பாளையத்திலிருந்து வேவுபார்க்கிறவர்களாகிய இரண்டு மனிதர்களை இரகசியமாக வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயருடைய விலைமாதுவின் வீட்டிற்குச் சென்று, அங்கே தங்கினார்கள். 2 தேசத்தை வேவுபார்ப்பதற்காக, இஸ்ரவேல் மக்களில் சில மனிதர்கள் இந்த ராத்திரியிலே இங்கே வந்தார்கள் என்று எரிகோவின் ராஜாவுக்கு சொல்லப்பட்டது. 3 அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபிடத்திற்கு ஆள் அனுப்பி: உன்னிடத்தில் வந்து, உன் வீட்டிற்குள் பிரவேசித்த மனிதர்களை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்ப்பதற்காக வந்தார்கள் என்று சொல்லச்சொன்னான். 4 அந்தப் பெண் அந்த இரண்டு மனிதர்களையும் கொண்டுபோய் அவர்களை ஒளித்துவைத்து: உண்மைதான், என்னிடத்தில் மனிதர்கள் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எந்த ஊரைச்சார்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியாது. 5 பட்டணத்தின் வாசற்கதவை அடைக்கும் நேரத்தில் இருட்டும்வேளையிலே, அந்த மனிதர்கள் புறப்பட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் எங்கு போனார்கள் என்று எனக்குத் தெரியாது; சீக்கிரமாகப் போய் அவர்களைத் தேடுங்கள்; நீங்கள் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம் என்றாள். 6 அவள் அவர்களை வீட்டின்மேல் ஏறச்செய்து, வீட்டின்மேல் பரப்பப்பட்ட சணல் நார்களுக்குள்ளே மறைத்து வைத்திருந்தாள். 7 ராஜாவின் ஆட்கள் யோர்தானுக்குப் போகிற வழியில் துறைமுகம்வரை அவர்களைத் தேடிப்போனார்கள்; அவர்களைத் தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசற்கதவு அடைக்கப்பட்டது. 8 அந்த மனிதர்கள் படுத்துக்கொள்வதற்குமுன்னே அவள் வீட்டின்மேல் அவர்களிடத்திற்கு ஏறிச்சென்று, 9 யெகோவா உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், தேசத்து மக்கள் எல்லோரும் பயந்துபோனார்களென்றும் அறிவேன். 10 ௧0 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, யெகோவா உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகச்செய்ததையும், நீங்கள் யோர்தானுக்கு மறுபுறத்தில் அழித்துப்போட்ட எமோரியர்களின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம். 11 ௧௧ கேள்விப்பட்டபோது எங்களுடைய இருதயம் கரைந்துபோனது, உங்களாலே எல்லோருடைய தைரியமும் அற்றுப்போனது; உங்களுடைய தேவனாகிய யெகோவாவே மேலே வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர். 12 ௧௨ இப்போதும், நான் உங்களுக்கு தயவுசெய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்திற்கு தயவுசெய்வோம் என்று யெகோவாவுடைய நாமத்தில் எனக்கு சத்தியம் செய்து, 13 ௧௩ நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரர்களையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடு வைத்து, எங்களுடைய ஜீவனை சாவுக்குத் தப்புவிக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்றாள். 14 ௧௪ அப்பொழுது அந்த மனிதர்கள் அவளை நோக்கி: எங்களுடைய ஜீவன் உங்களுடைய ஜீவனுக்கு சமம்; நீங்கள் எங்களுடைய காரியத்தை வெளிப்படுத்தாமலிருந்தால், யெகோவா எங்களுக்கு தேசத்தைக் கொடுக்கும்போது, நாங்கள் உங்களிடம் தயவாகவும் உண்மையாகவும் இருப்போம் என்றார்கள். 15 ௧௫ அப்பொழுது அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல்வழியாக இறக்கிவிட்டாள்; அவள் வீடு பட்டணத்தின் மதில்மேல் இருந்தது; பட்டணத்திலே அவள் குடியிருந்தாள். 16 ௧௬ அப்பொழுது அவள் அவர்களை நோக்கி: தேடுகிறவர்கள் உங்களைப் பார்க்காதபடி, நீங்கள் மலையிலே போய், அவர்கள் திரும்பிவரும்வரைக்கும் அங்கே மூன்றுநாட்கள் ஒளிந்திருந்து, பின்பு உங்களுடைய வழியிலே போங்கள் என்றாள். 17 ௧௭ அப்பொழுது அந்த மனிதர்கள் அவளை நோக்கி: இதோ, நாங்கள் தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்த சிவப்பு நூல்கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன் வீட்டிலே சேர்த்துக்கொள். 18 ௧௮ இல்லாவிட்டால் நீ எங்கள் கையில் வாங்கின சத்தியத்திற்கு நீங்கலாயிருப்போம். 19 ௧௯ எவனாகிலும் உன் வீட்டு வாசல்களிலிருந்து வெளியே புறப்பட்டால், அவனுடைய இரத்தப்பழி அவனுடைய தலையின்மேல் இருக்கும்; எங்கள்மேல் குற்றம் இல்லை; உன்னோடு வீட்டில் இருக்கிற எவன்மீதாவது கைபோடப்பட்டதானால், அவனுடைய இரத்தப்பழி எங்கள் தலையின்மேல் இருக்கும். 20 ௨0 நீ எங்களுடைய காரியத்தை வெளிப்படுத்துவாயானால், நீ எங்கள் கையில் வாங்கின சத்தியத்திற்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள். 21 ௨௧ அதற்கு அவள்: உங்களுடைய வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டாள்; அவர்கள் போய்விட்டார்கள்; பின்பு அவள் அந்த சிவப்புக்கயிற்றை ஜன்னலிலே கட்டிவைத்தாள். 22 ௨௨ அவர்கள் போய், மலையிலே சேர்ந்து, தேடுகிறவர்கள் திரும்பிவரும்வரைக்கும், மூன்றுநாட்கள் அங்கே தங்கியிருந்தார்கள்; தேடுகிறவர்கள் வழிகளிலெல்லாம் அவர்களைத் தேடியும் காணமுடியாமல்போனார்கள். 23 ௨௩ அந்த இரண்டு மனிதர்களும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றைக்கடந்து, நூனின் மகனாகிய யோசுவாவிடம் வந்து, தங்களுக்கு சம்பவித்த எல்லாவற்றையும் அவனுக்குத் தெரிவித்து; 24 ௨௪ யெகோவா தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் மக்களெல்லோரும் நமக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள் என்று அவனிடம் சொன்னார்கள்.

< யோசுவா 2 >