< எரேமியா 19 >

1 யெகோவா சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக் கொண்டு, மக்களின் மூப்பரிலும், ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு,
யெகோவா கூறுவது இதுவே: நீ போய் குயவனிடமிருந்து களிமண் ஜாடி ஒன்றை வாங்கு. உன்னுடைய மக்களில் முதியவர்கள் சிலரையும், ஆசாரியர்களில் சிலரையும் கூட்டிக்கொண்டு,
2 கிழக்கு வாசலுக்கு முன்பான இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கில் புறப்பட்டுப்போய், நான் உன்னுடன் சொல்லும் வார்த்தைகளை அங்கே பிரசித்தப்படுத்து.
கிழக்கு வாசலின் அருகேயுள்ள பென் இன்னோம் பள்ளத்தாக்கிற்குப் போ. அங்கே நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளை அறிவி.
3 நீ அவர்களை நோக்கி: யூதாவின் ராஜாக்களே, எருசலேமின் குடிகளே, யெகோவாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: இதோ, நான் இந்த இடத்தின்மேல் ஒரு பொல்லாப்பை வரச்செய்வேன்; அதைக் கேட்கிற அனைவருடைய காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.
நீ அவர்களிடம், “யூதாவின் அரசர்களே! எருசலேமின் மக்களே! கேளுங்கள். இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இந்த இடத்தில் நான் ஒரு பேராபத்தைக் கொண்டுவரப் போகிறேன். அதைப்பற்றிக் கேட்கும் ஒவ்வொருவருடைய காதுகளிலும் அது உறுத்திக்கொண்டே இருக்கும்” என்று சொல்.
4 அவர்கள் என்னை விட்டுவிட்டு, இந்த இடத்தை அந்நிய இடமாக்கி, தாங்களும், தங்கள் முற்பிதாக்களும், யூதாவின் ராஜாக்களும், அறியாதிருந்த அந்நிய தெய்வங்களுக்கு அதில் தூபங்காட்டி, இந்த இடத்தைக் குற்றமில்லாதவர்களின் இரத்தத்தினால் நிரப்பினதினாலும்,
ஏனெனில், இவர்கள் என்னைக் கைவிட்டு, இந்த இடத்தை அந்நிய தெய்வங்களின் இடமாக்கினார்கள். இவர்கள் இந்த இடத்தில் தாங்களோ, தங்கள் முற்பிதாக்களோ அல்லது யூதாவின் அரசர்களோ ஒருபோதும் அறிந்திராத தெய்வங்களுக்குப் தூபங்காட்டி, குற்றமற்ற இரத்தத்தினால் இந்த இடத்தையும் நிரப்பியிருக்கிறார்கள்.
5 தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிப்பதற்கு பாகாலின் மேடைகளைக் கட்டினதினாலும் இப்படி வரச்செய்வேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை, சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை.
இவர்கள் தங்கள் மகன்களைப் பாகாலுக்குப் பலிகளாக நெருப்பில் பலியிடுவதற்காக பாகாலின் மேடைகளையும் கட்டியிருக்கிறார்கள். இப்படியான ஒரு செயலை நான் கட்டளையிட்டதுமில்லை, சொல்லியதுமில்லை. அது என்னுடைய மனதில் தோன்றினதுமில்லை.
6 ஆகையால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இந்த இடம் தோப்பேத்தென்றும், இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கென்றும் இனிச் சொல்லப்படாமல், சங்கார பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்.
ஆகையால் எச்சரிக்கையாயிருங்கள். இதோ, இந்த இடம் தோப்பேத் என்றோ பென் இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ அழைக்கப்படாமல், படுகொலைப் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் நாட்கள் வரும் என்று யெகோவா அறிவிக்கிறார்.
7 அப்பொழுது நான் யூதாவுக்கும் எருசலேமுக்கும் கொண்டிருந்த ஆலோசனையை இந்த இடத்தில் வெறுமையாக்கி, அவர்கள் எதிரிகளுக்கு முன்பாக அவர்களைப் பட்டயத்தினாலும், அவர்கள் உயிரை வாங்கத்தேடுகிறவர்களின் கையினாலும் விழச்செய்து, அவர்கள் பிணங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்து,
இந்த இடத்தில் யூதாவினுடைய, எருசலேமினுடைய திட்டங்களை அழித்துப்போடுவேன். அவர்களுடைய பகைவர்களுக்கு முன்பாக அவர்களைக் கொல்லத் தேடுகிறவர்களின் கையிலுள்ள வாளினால் நான் அவர்களை விழப்பண்ணுவேன். அவர்களின் உடல்களைப் பூமியின் மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும் உணவாகக் கொடுப்பேன்.
8 இந்த நகரத்தை அழிக்கவும் சத்தமிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் சத்தமிடுவான்.
நான் இந்தப் பட்டணத்தைப் பாழாக்கி, அதை ஒரு கேலிக்குரியதாக்குவேன். அதைக் கடந்துபோகிற யாவரும் பிரமித்து, அதற்கு ஏற்பட்ட எல்லா காயங்களைக் கண்டு ஏளனம் செய்வார்கள்.
9 அவர்களுடைய எதிரிகளும் அவர்கள் உயிரை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றுகையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் மகன்களின் மாம்சத்தையும் தங்கள் மகள்களின் மாம்சத்தையும் சாப்பிடச்செய்வேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தை சாப்பிடுவான் என்று யெகோவா சொல்லுகிறார் என்று நீ சொல்லி,
அவர்களை தங்கள் மகன்களின் மாம்சத்தையும், மகள்களின் மாம்சத்தையும் சாப்பிடச் செய்வேன். அவர்களை கொல்லவேண்டுமென்றிருக்கும் அவர்களுடைய பகைவர்களினால் அவர்கள் முற்றுகையிடப்பட்டு துன்பப்படும்போது அவர்கள், ஒருவர் மற்றவரின் மாம்சத்தைச் சாப்பிடுவார்கள்.
10 ௧0 உன்னுடன் கூடவந்த மனிதனுடைய கண்களுக்கு முன்பாக அந்தக் கலசத்தை உடைத்துப்போட்டு,
“அதன்பின் உன்னோடு வந்த மனிதர் பார்த்துக்கொண்டிருக்கையில் இந்த ஜாடியை உடை.
11 ௧௧ அவர்களை நோக்கி: திரும்பச் சரிசெய்யமுடியாத குயவனுடைய மண்பாத்திரத்தை உடைத்துப்போட்டவிதமாக, நான் இந்த மக்களையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்தில் சவங்களைப் புதைப்பார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
நீ அவர்களிடம், ‘சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: உடைக்கப்பட்டு திருத்த முடியாதிருக்கிற இக்குயவனுடைய ஜாடியைப்போல் நான் இந்த தேசத்தையும், இந்தப் பட்டணத்தையும் நொறுக்கிப் போடுவேன். தோப்பேத்தில் இடமில்லாமல் போகுமட்டும் இறந்தவர்களை அங்கே புதைப்பார்கள்.
12 ௧௨ இவ்விதமாக நான் இந்த இடத்திற்கும் இதின் குடிமக்களுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்திற்குச் சரியாக்குவேன்.
இந்த இடத்திற்கும், இங்கு வாழ்பவர்களுக்கும் இப்படியே செய்வேன் என்று யெகோவா அறிவிக்கிறார். இந்தப் பட்டணத்தை தோப்பேத்தைப் போலாக்குவேன்.
13 ௧௩ எந்த வீடுகளின்மேல் வானத்தின் எல்லா சேனைக்கும் தூபங்காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற இடத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாக இருக்குமென்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
எருசலேமின் வீடுகளும், யூதா அரசர்களின் வீடுகளும் தோப்பேத்தைப்போல் கறைப்படுத்தப்படும். நட்சத்திர சேனைகளுக்குத் தங்கள் கூரைகளின்மேல் தூபங்காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளைச் செலுத்திய எல்லா வீடுகளும் அப்படியே கறைப்படும்.’”
14 ௧௪ பின்பு எரேமியா, யெகோவா தன்னைத் தீர்க்கதரிசனஞ்சொல்ல அனுப்பின தோப்பேத்திலிருந்து வந்து, யெகோவாவுடைய ஆலயத்தின் முற்றத்தில் நின்றுகொண்டு, எல்லா மக்களையும் பார்த்து:
அதன்பின் எரேமியா, யெகோவா தன்னை இறைவாக்கு உரைக்கும்படி அனுப்பின தோப்பேத்திலிருந்து திரும்பிவந்தான். அவன் யெகோவாவின் ஆலய முற்றத்தில் நின்று எல்லா மக்களிடமும் சொன்னதாவது:
15 ௧௫ இதோ, நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமல் உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினதினால் நான் இந்த நகரத்திற்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் இதின்மேலும் இதைச் சுற்றியுள்ள பட்டணங்களின்மேலும் வரச்செய்வேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றான்.
“இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘கேளுங்கள்; இந்த மக்கள் தலைக்கனம் உள்ளவர்களானபடியாலும், என் வார்த்தைகளைக் கேட்காதபடியாலும் நான் இப்பட்டணங்களின் மேலும், அதைச் சுற்றியுள்ள எல்லா கிராமங்களின் மேலும் அவைகளுக்கு எதிராக நான் கூறியிருந்த எல்லா பேராபத்துக்களையும் கொண்டுவருவேன் என்கிறார்’ என்றான்.”

< எரேமியா 19 >