< ஏசாயா 17 >

1 தமஸ்குவைக் குறித்த அறிவிப்பு. இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும். 2 ஆரோவேரின் பட்டணங்கள் பாழாய் விடப்பட்டு, மந்தை வெளியாயிருக்கும்; மிரட்டுவாரில்லாமல் அவைகள் அங்கே படுத்துக்கொள்ளும். 3 பாதுகாப்பு எப்பிராயீமையும், அரசாட்சி தமஸ்குவையும் விட்டொழியும்; இஸ்ரவேல் மக்களுடைய மகிமைக்கு சம்பவித்ததுபோல சீரியாவில் மீதியாயிருப்பவர்களுக்கும் சம்பவிக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார். 4 அக்காலத்திலே யாக்கோபின் மகிமை குறைந்துபோகும், அவனுடைய கொழுத்த உடல் மெலிந்துபோகும். 5 ஒருவன் ஓங்கின பயிரை அறுவடைசெய்து, தன் கையினால் கதிர்களை அறுத்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே கதிர்களைச் சேர்க்கிறதுபோலிருக்கும். 6 ஆனாலும் ஒலிவமரத்தை உலுக்கும்போது நுனிக்கொம்பிலே இரண்டு மூன்று காய்களும், காய்க்கிற அதின் கிளைகளிலே நான்கோ அல்லது ஐந்தோ காய்களும் மீதியாயிருப்பதுபோல, அதிலே பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீதியாயிருக்குமென்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறார். 7 அக்காலத்திலே மனிதன் தன் கைகளின் செயல்களாகிய பீடங்களை பார்க்காமலும், தன் விரல்கள் உண்டாக்கின தோப்புவிக்கிரகங்களையும், சிலைகளையும் பார்க்காமலும், 8 தன்னை உண்டாக்கினவரையே பாரப்பான், அவன் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரையே பார்த்துக் கொண்டிருக்கும். 9 அக்காலத்திலே அவர்களுடைய பாதுகாப்பான பட்டணங்கள் இஸ்ரவேல் மக்களுக்கு மீதியாக வைக்கப்பட்ட தழையைப்போலவும், நுனிக்கொம்பைப்போலவுமாகி, பாழாய்க்கிடக்கும். 10 ௧0 உன் பெலமாகிய கன்மலையை நீ நினைக்காமல், உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்; ஆகவே நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும், 11 ௧௧ பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் செய்தாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும். 12 ௧௨ ஐயோ, கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக மக்களின் கூட்டம், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற மக்கள் கூட்டங்களின் சத்தமும் உண்டாயிருக்கிறது. 13 ௧௩ மக்கள் கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாக ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறந்துபோகிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள். 14 ௧௪ இதோ, மாலை நேரத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்திற்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையிடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.

< ஏசாயா 17 >