< ஆபகூக் 1 >

1 ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி தரிசனமாகப் பெற்றுக்கொண்ட செய்தி.
இறைவாக்கினன் ஆபகூக் என்பவனுக்கு வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு.
2 யெகோவாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேட்காமலிருக்கிறீரே! கொடுமையின் காரணமாக நான் எதுவரைக்கும் உம்மை நோக்கி உதவிக்காக் கூப்பிடுவேன், நீர் காப்பாற்றாமல் இருக்கிறீரே!
யெகோவாவே, நான் எவ்வளவு காலத்திற்கு உதவிகேட்டு உம்மைக் கூப்பிட வேண்டும்? நீரோ இன்னும் செவிகொடாமல் இருக்கிறீரே. எவ்வளவு காலத்திற்கு உம்மிடம், “வன்முறை” எனக் கதறவேண்டும்? இன்னும் காப்பாற்றாமல் இருக்கிறீரே.
3 நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கச்செய்கிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு முன்னே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.
நீர் ஏன் என்னை அநீதியைப் பார்க்கும்படி செய்கிறீர்? ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறீர்? அழிவும், வன்செயலும் என் முன்னே இருக்கின்றனவே; போராட்டமும், வாதையும் பெருகுகின்றன.
4 ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை சூழ்ந்துகொள்ளுகிறான்; ஆகவே நியாயம் புரட்டப்படுகிறது.
ஆதலால் சட்டம் வலுவிழந்துள்ளது, நீதி நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. கொடுமையானவர்கள் நேர்மையானவர்களை ஒடுக்குகிறார்கள். அதனால் நீதி புரட்டப்படுகிறதே.
5 நீங்கள் அந்நியமக்களை நோக்கிப்பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு செயலை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.
“பிற நாடுகளைக் கவனித்துப் பாருங்கள், பார்த்து முழுவதுமாய் வியப்படையுங்கள். உங்களுக்குச் சொன்னாலும், உங்களால் நம்பமுடியாத ஒரு செயலை, உங்கள் நாட்களிலேயே நான் செய்யப்போகிறேன்.
6 இதோ, நான் கல்தேயரென்னும் கொடியதும் வேகமுமான மக்களை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத குடியிருப்புக்களைக் கட்டிக்கொள்ள தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள்.
இரக்கமற்றவர்களும், மூர்க்கம் கொண்டவர்களுமான பாபிலோனியரை நான் எழுப்புகிறேன். அவர்கள் தங்களுக்குச் சொந்தமல்லாத இருப்பிடங்களைக் கைப்பற்றும்படி, பூமியெங்கும் அணியணியாய் செல்வார்கள்.
7 அவர்கள் கொடியவர்களும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும்.
அவர்கள் பயமும் திகிலும் ஊட்டும் மக்கள்; அவர்கள் தாங்கள் செய்வதே சரியானதும் சட்டமும் என்று எண்ணுகிறவர்கள். தங்கள் சொந்த மேன்மையை மாத்திரமே தேடுகிறவர்கள்.
8 அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளைவிட வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாக இருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர்கள் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்து வருவார்கள்.
அவர்களுடைய குதிரைகள் சிறுத்தைப் புலிகளைவிட வேகமானவை, சாயங்காலத்தில் நடமாடும் ஓநாயிலும் பயங்கரமானவை. அவர்களுடைய குதிரைப்படை தலைதெறிக்க ஓடிவரும்; அவர்களுடைய குதிரைவீரர்களோ, தொலைவிலிருந்து வருகிறார்கள். இரைமேல் பாயும் கழுகைப்போல, அவர்கள் வருகிறார்கள்;
9 அவர்களெல்லோரும் கொடுமைசெய்ய வருவார்கள்; அவர்களுடைய முகங்கள் வற்றச் செய்யும் கீழ்க்காற்றைப்போலிருக்கும்; அவர்கள் மணல் அளவு மக்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள்.
அவர்கள் எல்லோரும் வன்முறையை நாடியே வருகிறார்கள். அவர்களுடைய படைகள், பாலைவனக் காற்றுப்போல் முன்னேறிச் சென்று, கைதிகளை மணலைப்போல வாரிச் சேர்த்துக்கொள்வார்கள்.
10 ௧0 அவர்கள் ராஜாக்களைக் கொடுமை செய்வார்கள்; அதிபதிகள் அவர்களுக்குக் கேலிக்குரியவர்களாக இருப்பார்கள்; அவர்கள் மதில்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்.
அவர்கள் அரசர்களை கேலிசெய்து, ஆளுநர்களை ஏளனம் செய்கிறார்கள். அரண்செய்த பட்டணங்களையெல்லாம் பார்த்து நகைக்கிறார்கள்; முற்றுகை அரண்களை மண்ணினால் கட்டி, அவற்றைக் கைப்பற்றுகிறார்கள்.
11 ௧௧ அப்பொழுது அவனுடைய மனம்மாற, அவன் தன் பெலன் தன் தேவனாலே உண்டானதென்று சொல்லி மிஞ்சிப்போய்க் குற்றவாளியாவான்.
காற்றைப்போல் கடந்து போகிறார்கள். அவர்கள் தங்கள் சுயபெலத்தையே தெய்வமாகக் கொண்டிருக்கும் குற்றவாளிகள்.”
12 ௧௨ யெகோவாவே, நீர் ஆரம்பகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை; யெகோவாவே, நியாயத்தீர்ப்புச் செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.
யெகோவாவே, என் இறைவனே, என் பரிசுத்தமானவரே, நீர் நித்தியத்தில் இருந்தே உள்ளவர் அல்லவோ? நாங்களும் அழிக்கப்பட்டுப் போவோமா? யெகோவாவே, எங்கள் நலனுக்காகத்தானே நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற நீர் பாபிலோனியரை நியமித்திருக்கிறீர்; கன்மலையே, எங்களைத் தண்டிக்க நீர் அவர்களை அமர்த்தியிருக்கிறீர்.
13 ௧௩ தீமையைப் பார்க்காமலிருக்கிற சுத்தக்கண்ணனே, அநியாயத்தை பார்த்துக்கொண்டிருக்கமாட்டீரே; அப்படியிருக்க துரோகிகளை நீர் பார்த்துக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைக்காட்டிலும் நீதிமானாக இருக்கிறவனை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?
உம்முடைய கண்கள் அதிக தூய்மையானதால், அவை தீமையைப் பார்ப்பதில்லை; அநியாயத்தை சகிக்க உம்மால் முடியாது. அப்படியானால் துரோகிகளை நீர் ஏன் சகிக்கிறீர்? கொடியவர்களான பாபிலோனியர் தங்களைவிட நீதியானவர்களை விழுங்கும்போது நீர் ஏன் மவுனமாய் இருக்கிறீர்?
14 ௧௪ மனிதர்களைச் சமுத்திரத்து மீன்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமமாக்குகிறதென்ன?
நீர் எங்களை கடலில் உள்ள மீன்களைப் போலவும், தலைவனில்லாத கடல் பிராணிகளைப் போலவுமா காண்கிறீர்?
15 ௧௫ அவர்களெல்லோரையும் தூண்டிலைக்கொண்டு இழுத்துக்கொள்கிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் கூடையிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான்.
பாபிலோனியனான கொடிய எதிரிகள் எல்லோரையும் தூண்டிலினால் இழுக்கிறான். தனது வலையினால் அவர்களைப் பிடிக்கிறான். தனது இழுவை வலையினால் அவர்களை ஒன்றாய் அள்ளிச் சேர்க்கிறான். இவ்விதம் அவன் மகிழ்ச்சிகொண்டு களிகூருகிறான்.
16 ௧௬ ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் உணவு சுவையுள்ளதாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் கூடைக்குத் தூபங்காட்டுகிறான்.
ஆதலினால் அவன் தனது வலைகளுக்குப் பலியிட்டு, தனது இழுவை வலைக்கு தூபங்காட்டுகிறான். ஏனெனில் தனது வலையினால் அவன் செல்வச் சிறப்புடன் வாழ்ந்து சிறந்த உணவைச் சாப்பிட்டு மகிழ்கிறான்.
17 ௧௭ இதற்காக அவன் தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் மக்களை எப்போதும் கொன்றுபோடவேண்டுமோ?
அப்படியாயின் அவன் நாடுகளை இரக்கமின்றி அழிக்க இடங்கொடுப்பீரோ? அவன் தனது வலையை தொடர்ந்து நிரப்பிக்கொண்டே இருக்கவேண்டுமோ?

< ஆபகூக் 1 >