< ஆதியாகமம் 42 >

1 எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் மகன்களை நோக்கி: “நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?
எகிப்திலே தானியம் இருக்கிறதாக யாக்கோபு அறிந்தான். அவன் தன் மகன்களிடம், “நீங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஏன் சும்மா இருக்கிறீர்கள்?
2 எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்க நீங்கள் அங்கே போய், நமக்காகத் தானியத்தை வாங்குங்கள்” என்றான்.
எகிப்திலே தானியம் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். நாம் சாகாமல் உயிர்வாழும்படி, அங்குபோய் நமக்குத் தானியம் வாங்கி வாருங்கள்” என்றான்.
3 யோசேப்பின் சகோதரர்கள் பத்துப்பேர் தானியம் வாங்க எகிப்திற்குப் போனார்கள்.
அப்பொழுது யோசேப்பின் பத்து சகோதரரும் தானியம் வாங்குவதற்காக எகிப்திற்குப் போனார்கள்.
4 யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ தீங்கு வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவனுடைய சகோதரர்களோடு அனுப்பவில்லை.
ஆனால் யோசேப்பின் தம்பியான பென்யமீனுக்குத் தீங்கு நேரிடலாம் எனப் பயந்த யாக்கோபு, அவனை அவர்களோடு அனுப்பவில்லை.
5 கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்ததால், தானியம் வாங்கப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் மகன்களும் போனார்கள்.
கானான் நாட்டிலும் பஞ்சம் ஏற்பட்டபடியால், தானியம் வாங்குவதற்காக எகிப்திற்குப் போனவர்களுடன் இஸ்ரயேலின் மகன்களும் போனார்கள்.
6 யோசேப்பு அந்த தேசத்திற்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் மக்கள் அனைவருக்கும் தானியத்தை விற்றான். யோசேப்பின் சகோதரர்கள் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள்.
இப்பொழுது யோசேப்பு எகிப்து நாட்டின் ஆளுநனாக இருந்தான், மக்கள் யாவருக்கும் அவனே தானியம் விற்றான். யோசேப்பின் சகோதரர் அங்கு வந்ததும், தரையிலே முகங்குப்புற விழுந்து அவனை வணங்கினார்கள்.
7 யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர்கள் என்று தெரிந்துகொண்டான்; தெரிந்தும் தெரியாதவன்போலக் கடினமாக அவர்களோடு பேசி: “நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள்” என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: “கானான் தேசத்திலிருந்து தானியம் வாங்கவந்தோம்” என்றார்கள்.
யோசேப்பு சகோதரர்களைக் கண்டவுடனே, அவர்களை இன்னார் என அறிந்துகொண்டான். ஆனால் அவன் அவர்களை அறியாத ஒரு அந்நியனைப்போல் பாசாங்கு செய்து கடுமையாய்ப் பேசி, “நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் தானியம் வாங்கும்படி கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறோம்” என்றார்கள்.
8 யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர்கள் என்று தெரிந்தும், அவர்களுக்கு அவனைத் தெரியவில்லை.
யோசேப்பு தன் சகோதரர்களை யாரென்று அறிந்திருந்தாலும் அவர்களோ அவனை இன்னாரென்று அறிந்துகொள்ளவில்லை.
9 யோசேப்பு அவர்களைக் குறித்துத் தான் கண்ட கனவுகளை நினைத்து, அவர்களை நோக்கி: “நீங்கள் உளவாளிகள், தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள்” என்றான்.
பின்பு யோசேப்பு, தான் முன்னர் அவர்களைக் குறித்துக் கண்ட கனவுகளை நினைத்துத் தன் சகோதரர்களிடம், “நீங்கள் உளவாளிகள்! எங்கள் நாட்டில் பாதுகாப்புக் குறைவு எங்கிருக்கின்றது என அறியவே இங்கு வந்தீர்கள்” என்றான்.
10 ௧0 அதற்கு அவர்கள்: “அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் வாங்க வந்தோம்.
அதற்கு அவர்கள், “இல்லை ஆண்டவனே, உம்முடைய அடியவர்களாகிய நாங்கள் உணவு வாங்குவதற்காகவே இங்கு வந்திருக்கிறோம்.
11 ௧௧ நாங்கள் எல்லோரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நேர்மையானவர்கள்; உமது அடியார் உளவாளிகள் அல்ல” என்றார்கள்.
நாங்கள் எல்லோரும் ஒரே தகப்பனின் பிள்ளைகள். உமது அடியார்கள் உண்மையானவர்கள், உளவாளிகள் அல்ல” என்றார்கள்.
12 ௧௨ அதற்கு அவன்: “அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள்” என்றான்.
யோசேப்போ, “இல்லை! நீங்களோ எங்கள் நாடு எங்கே பாதுகாப்பற்று இருக்கிறது எனப் பார்க்கவே வந்தீர்கள்” என்றான்.
13 ௧௩ அப்பொழுது அவர்கள்: “உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான்” என்றார்கள்.
அதற்கு அவர்கள், “உம்முடைய அடியார்களாகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள், கானான் நாட்டில் வாழும் ஒரே தகப்பனின் மகன்கள். கடைசி மகன் இப்பொழுது எங்கள் தகப்பனோடு இருக்கிறான், மற்றவன் இறந்துபோனான்” என்றார்கள்.
14 ௧௪ யோசேப்பு அவர்களை நோக்கி: “உங்களை உளவாளிகள் என்று நான் சொன்னது சரி.
யோசேப்பு அவர்களிடம், “நான் சொன்னபடியே நீங்கள் உளவாளிகள்தான்!
15 ௧௫ உங்களுடைய இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்படுவது இல்லை என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.
நான் உங்களைச் சோதிக்கப்போகிறேன். பார்வோன் வாழ்வது நிச்சயம்போல, உங்கள் இளைய சகோதரன் இங்கு வந்தாலன்றி, நீங்கள் இவ்விடத்தைவிட்டுப் போகமாட்டீர்கள் என்பதும் நிச்சயம்.
16 ௧௬ இதனால் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்து வரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மை உண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படும்வரைக்கும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் உளவாளிகள்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
உங்கள் இளைய சகோதரனை அழைத்துவர இப்பொழுது நீங்கள் உங்களில் ஒருவனை அனுப்பவேண்டும்; மற்றவர்கள் சிறையில் வைக்கப்படுவீர்கள், நீங்கள் சொன்னவை உண்மையோ எனப் பார்ப்பதற்கு உங்கள் வார்த்தைகள் இவ்வாறு சோதிக்கப்படும். இல்லாவிட்டால் பார்வோன் வாழ்வது நிச்சயம்போல நீங்கள் உளவாளிகள் என்பதும் நிச்சயமே!” என்றான்.
17 ௧௭ அவர்கள் எல்லோரையும் மூன்றுநாட்கள் காவலிலே வைத்தான்.
அவன் அவர்களை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைத்தான்.
18 ௧௮ மூன்றாம் நாளிலே யோசேப்பு அவர்களை நோக்கி: “நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்; நீங்கள் உயிரோடு இருக்க ஒன்று செய்யுங்கள்.
மூன்றாம் நாள் யோசேப்பு தன் சகோதரரிடம், “நான் இறைவனுக்குப் பயப்படுகிறவன், நீங்கள் இதைச் செய்யுங்கள்; அப்பொழுது உயிர் வாழ்வீர்கள்.
19 ௧௯ நீங்கள் நேர்மையானவர்களானால், சகோதரர்களாகிய உங்களில் ஒருவன் காவலில் கட்டப்பட்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்திற்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து,
நீங்கள் உண்மையானவர்களானால், உங்கள் சகோதரர்களில் ஒருவன் இங்கே சிறையில் இருக்கட்டும், மற்றவர்கள் பட்டினியாய் இருக்கும் உங்கள் குடும்பத்துக்குத் தானியத்தைக் கொண்டுபோங்கள்.
20 ௨0 உங்கள் இளைய சகோதரனை என்னிடத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் உண்மையென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை” என்றான். அவர்கள் அப்படிச்செய்கிறதற்குச் சம்மதித்து:
உங்கள் வார்த்தை நிரூபிக்கப்படும்படியும், நீங்கள் சாகாமல் இருக்கும்படியும், உங்களுடைய இளைய சகோதரனை என்னிடம் கொண்டுவர வேண்டும்” என்றான். அவர்கள் அவ்வாறு செய்யும்படி புறப்பட்டார்கள்.
21 ௨௧ நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மனவேதனையை நாம் கண்டும், அவன் சொல்லைக் கேட்காமற்போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது” என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.
பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “நிச்சயமாய் நாம் நம்முடைய சகோதரனுக்குச் செய்த தீமைக்காகவே இப்பொழுது தண்டிக்கப்படுகிறோம். அவன் தன் உயிருக்காக மன்றாடி, துன்பப்பட்டதைக் கண்டும், நாம் அவனுக்குச் செவிகொடுக்கவில்லை. அதனால்தான் இத்துன்பம் நமக்கு நேரிட்டது” என்று சொல்லிக்கொண்டார்கள்.
22 ௨௨ அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: “இளைஞனுக்கு விரோதமாகப் பாவம் செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேட்காமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவனுடைய இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது” என்றான்.
அப்பொழுது ரூபன், “அச்சிறுவனுக்கு விரோதமாய்ப் பாவம்செய்ய வேண்டாமென நான் சொல்லவில்லையா? ஆனால் நீங்கள் கேட்கவில்லை! இப்பொழுது அவனுடைய இரத்தத்திற்கு நாம் கணக்குக் கொடுத்தேயாக வேண்டும்” என்றான்.
23 ௨௩ யோசேப்பு மொழிபெயர்ப்பாளரைக்கொண்டு அவர்களிடத்தில் பேசியதால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்.
யோசேப்பு மொழி பெயர்ப்பாளன் மூலம் பேசியதால், தாங்கள் அவ்வாறு பேசியது அவனுக்கு விளங்கும் என்பதை அவர்கள் உணரவில்லை.
24 ௨௪ அவன் அவர்களைவிட்டு அப்புறம்போய் அழுது, திரும்ப அவர்களிடத்திற்கு வந்து, அவர்களோடு பேசி, அவர்களில் சிமியோனைப் பிடித்து, அவர்களுடைய கண்களுக்கு முன்பாகக் கட்டிவைத்தான்.
யோசேப்பு அவர்களைவிட்டு அப்பாலே போய் அழத்தொடங்கினான். அதன்பின் திரும்பவும் வந்து, அவர்களுடன் பேசினான். அவன் அவர்களோடிருந்த சிமியோனைப் பிடித்து, மற்றச் சகோதரரின் முன்பாகக் கட்டுவித்தான்.
25 ௨௫ பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்களுடைய பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், பயணத்திற்குத் தேவையான ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.
பின்பு யோசேப்பு அவர்களுடைய சாக்குகளில் தானியத்தை நிரப்பும்படியும், ஒவ்வொருவருடைய வெள்ளியையும் திரும்ப அவனவன் சாக்கில் வைக்கும்படியும், அவர்கள் பயணத்திற்குத் தேவையான உணவுகளைக் கொடுக்கும்படியும் கட்டளையிட்டான். அவ்வாறே செய்து முடிந்ததும்,
26 ௨௬ அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அந்த இடம்விட்டுப் புறப்பட்டுப்போனார்கள்.
அவர்கள் தானியப் பொதிகளைத் தங்கள் கழுதைகளின்மேல் ஏற்றிக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டார்கள்.
27 ௨௭ தங்குகிற இடத்திலே அவர்களில் ஒருவன் தன் கழுதைக்குத் தீவனம் போடத் தன் சாக்கைத் திறந்தபோது, சாக்கிலே தன் பணம் இருக்கிறதைக் கண்டு,
இரவுக்காக தங்கிய இடத்தில் அவர்களில் ஒருவன் கழுதைக்குத் தீனி போடுவதற்காகத் தன் சாக்கைத் திறந்தான், அப்பொழுது சாக்கின் வாயில் தன் வெள்ளிக்காசு இருப்பதைக் கண்டான்.
28 ௨௮ தன் சகோதரர்களைப் பார்த்து, “என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, “தேவன் நமக்கு இப்படிச் செய்தது” என்ன என்றார்கள்.
அவன் தன் சகோதரரிடம், “என் வெள்ளிக்காசு திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கிறது, இதோ என் சாக்கில் அது இருக்கிறது பாருங்கள்” என்றான். அவர்கள் பயந்து மனங்கலங்கி, ஒருவரையொருவர் நடுக்கத்துடன் பார்த்து, “இறைவன் எங்களுக்குச் செய்திருப்பது என்ன?” என்றார்கள்.
29 ௨௯ அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபிடம் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து:
அவர்கள் கானான் நாட்டுக்குத் தங்கள் தகப்பன் யாக்கோபிடம் வந்தபோது, தங்களுக்கு நடந்ததையெல்லாம் அவனுக்குச் சொன்னார்கள்.
30 ௩0 “தேசத்திற்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை உளவுபார்க்க வந்தவர்கள் என்று நினைத்து எங்களோடு கடினமாகப் பேசினான்.
“எகிப்தில் அதிகாரியாய் இருப்பவன் எங்களுடன் மிகவும் கடுமையாகப் பேசி, எங்களை உளவு பார்ப்பவர்களைப் போல் நடத்தினான்.
31 ௩௧ நாங்களோ அவனை நோக்கி: நாங்கள் நேர்மையானவர்கள், உளவாளிகள் அல்ல.
ஆனால் நாங்கள் அவனிடம், ‘நாங்கள் நீதியானவர்கள்; உளவாளிகள் அல்ல.
32 ௩௨ நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள், ஒரு தகப்பனுடைய பிள்ளைகள், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்” என்றோம்.
நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரே தகப்பனின் பிள்ளைகள், ஒருவன் இறந்துவிட்டான்; இப்பொழுது இளையவன் எங்கள் தகப்பனோடு கானான் நாட்டில் இருக்கிறான்’ என்று சொன்னோம்.
33 ௩௩ அப்பொழுது தேசத்தின் அதிபதியானவன்: நீங்கள் நேர்மையானவர்கள் என்பதை நான் அறியும்படி உங்கள் சகோதரர்களில் ஒருவனை நீங்கள் என்னிடத்தில் விட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்திற்குத் தானியம் வாங்கிக்கொண்டுபோய்க் கொடுத்து,
“அப்பொழுது அந்நாட்டின் அதிபதியானவன் எங்களிடம், ‘நீங்கள் நீதியானவர்கள் என்று நான் அறிய உங்கள் சகோதரரில் ஒருவனை இங்கே என்னுடன் விட்டுவிட்டு, மற்றவர்கள் பட்டினியாய் இருக்கும் உங்கள் குடும்பத்துக்குத் தானியத்தை எடுத்துக்கொண்டு போங்கள்.
34 ௩௪ உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டு வாருங்கள்; அதனால் நீங்கள் உளவாளிகள் அல்ல, நேர்மையானவர்கள் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத் தேசத்திலே வியாபாரமும் செய்யலாம் என்றான் என்று சொன்னார்கள்.
ஆனால், நீங்கள் உளவாளிகள் அல்ல, நீதியானவர்கள் என நான் அறியும்படி, உங்கள் இளைய சகோதரனை என்னிடம் கொண்டுவாருங்கள். அப்பொழுது உங்கள் சகோதரனை உங்களிடம் திருப்பி ஒப்படைப்பேன், நீங்களும் இந்நாட்டில் வியாபாரம் செய்யலாம் என்று சொன்னான்’” என்றார்கள்.
35 ௩௫ அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டும்போது, இதோ, அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்தது; அந்த பணமுடிப்புகளை அவர்களும் அவர்கள் தகப்பனும் கண்டு பயந்தார்கள்.
அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டியபோது, ஒவ்வொருவனுடைய சாக்கிலும் அவனவனுடைய பணப்பை இருந்தது! அவர்களும், அவர்கள் தகப்பனும் அவற்றைக் கண்டபோது பயந்தார்கள்.
36 ௩௬ அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: “என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை; பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாக நேரிடுகிறது” என்றான்.
அவர்கள் தகப்பன் யாக்கோபு அவர்களிடம், “நீங்கள் எனக்கு என் பிள்ளைகளை இல்லாமல் செய்துவிட்டீர்கள். யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, இப்போது பென்யமீனையும் கொண்டு போகப்போகிறீர்கள். எல்லாமே எனக்கு விரோதமாய் இருக்கின்றதே!” என்று சொல்லிக் கலங்கினான்.
37 ௩௭ அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, “அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு மகன்களையும் கொன்றுபோடும்” என்று சொன்னான்.
அப்பொழுது ரூபன் தன் தகப்பனிடம், “நான் பென்யமீனை உம்மிடம் மறுபடியும் கொண்டுவராவிட்டால், என்னுடைய இரண்டு மகன்களையும் நீர் கொன்றுவிடலாம். அவனை என்னுடைய பாதுகாப்பிலேயே விட்டுவிடும், அவனை மறுபடியும் உம்மிடம் கொண்டுவருவேன்” என்றான்.
38 ௩௮ அதற்கு அவன்: “என் மகன் உங்களோடுகூடப் போவதில்லை; இவனுடைய அண்ணன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், நீங்கள் என் நரைமுடியைச் சஞ்சலத்தோடு பாதாளத்தில் இறங்கச்செய்வீர்கள்” என்றான். (Sheol h7585)
ஆனால் யாக்கோபு, “என் மகன் உங்களுடன் அங்கு வரமாட்டான்; அவன் சகோதரன் இறந்துபோனான், இவன் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கிறான். நீங்கள் போகும் பயணத்தில் இவனுக்கும் தீமையேதும் சம்பவித்தால், நரைத்த கிழவனாகிய என்னைத் துக்கத்துடனேயே சவக்குழிக்குள் போகச்செய்வீர்கள்” என்றான். (Sheol h7585)

< ஆதியாகமம் 42 >