< எசேக்கியேல் 23 >

1 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது:
2 மனிதகுமாரனே, ஒரே தாயின் மகள்களாகிய இரண்டு பெண்கள் இருந்தார்கள்.
“மனுபுத்திரனே, இரண்டு பெண்கள் இருந்தார்கள், அவர்கள் ஒரு தாயின் மகள்களாய் இருந்தார்கள்.
3 அவர்கள் எகிப்திலே விபசாரம் செய்தார்கள்; தங்களுடைய வாலிபத்திலே விபசாரம் செய்தார்கள்; அங்கே அவர்களுடைய மார்பகங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் முலைக்காம்புகள் தொடப்பட்டது.
அவர்கள் தங்கள் இளவயதிலிருந்தே விபசாரம் செய்து எகிப்தில் விபசாரிகளானார்கள். அந்நாட்டில் அவர்களுடைய மார்பகங்கள் தடவப்பட்டன. அவர்களுடைய கன்னிமையான மார்பகங்கள் தொடப்பட்டது.
4 அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள்; அவர்கள் என்னுடையவர்களாகி, மகன்களையும் மகள்களையும் பெற்றார்கள்; இவைகளே அவர்களுடைய பெயர்கள்; அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாகும்.
மூத்தவள் பெயர் ஒகோலாள். அவள் தங்கையின் பெயர் ஒகோலிபாள். அவர்கள் என் மனைவிகள், அவர்கள் எனக்கு மகன்களையும் மகள்களையும் பெற்றார்கள். ஒகோலாள் என்பது சமாரியா. ஒகோலிபாள் என்பது எருசலேம்.
5 அகோலாள் என்னுடையவளாக இருக்கும்போது விபசாரியானாள்.
“ஒகோலாள் என்னுடையவளாக இருக்கும்போதே விபசாரம் செய்தாள். அவள் தன் காதலர்களான அசீரிய வீரர்கள்மேல் மோகங்கொண்டாள்.
6 சிவப்புகலந்த நீலநிற ஆடை அணிந்த தலைவர்களும், அதிபதிகளும், சௌந்தரிய வாலிபர்களும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரர்களுமாக இருந்த அருகாமையின் தேசத்தாராகிய அசீரியர்கள் என்கிற தன்னுடைய நண்பர்கள்மேல் அவள் ஆசைவைத்து,
நீலப்பட்டு உடை உடுத்தியவர்களும், ஆளுநர்களும், அதிபதிகளுமான அவர்கள் அனைவருமே திடகாத்திரமான வாலிபர்களும் குதிரைவீரர்களுமாயிருந்தார்கள்.
7 அசீரியர்களில் தலைசிறந்தவர்களான அனைவரோடும், தான் ஆசைவைத்த அனைவரோடும் தன்னுடைய விபசாரத்தை நடப்பித்து, அவர்களுடைய அசுத்தமான எல்லா சிலைகளாலும் தீட்டுப்பட்டுப்போனாள்.
அசீரிய உயர்குடி மக்கள் அனைவரோடும் அவள் விபசாரம் பண்ணினாள். அவள் மோகங்கொண்ட அனைவரது விக்கிரகங்களையும் வழிபட்டு தன்னை கறைப்படுத்தினாள்.
8 தான் எகிப்திலே செய்த விபசாரத்தை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளுடன் உடல் உறவு கொண்டு, அவளுடைய கன்னிமையின் முலைக்காம்புகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்களுடைய விபசாரத்தை நடப்பித்தார்கள்.
அவள் எகிப்தில் ஆரம்பித்த தன் விபசாரத்தை விட்டுவிடவில்லை. அங்கே அவளுடைய வாலிப நாட்களில் அவளோடு உறவு கொண்டவர்கள், அவளது கன்னிமையின் மார்பகங்களைத் தடவி தங்களுடைய காமத்தை அவளில் தீர்த்துக் கொண்டார்கள்.
9 ஆகையால் அவளுடைய சிநேகிதர்களின் கையிலே, அவள் ஆசைகொண்டிருந்த அசீரியர்களின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன்.
“ஆகவே, அவள் மோகித்த அவளது காதலர்களான அசீரியரின் கையிலேயே, நான் அவளை ஒப்புவித்தேன்.
10 ௧0 அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்; அவளுடைய மகன்களையும் அவளுடைய மகள்களையும் சிறைபிடித்து, அவளையோ வாளினால் கொன்றுபோட்டார்கள்; அப்படியே அவளிடத்தில் தண்டனைகள் செய்யப்பட்டபடியால் பெண்களுக்குள் அவமதிக்கப்பட்டாள்.
அவர்கள் அவளை நிர்வாணமாக்கி, அவளுடைய மகன்களையும், மகள்களையும் கைதிகளாக்கி, அவளை வாளினால் கொன்றுபோட்டார்கள். அவள் பெண்களுக்குள்ளே அவமதிக்கப்பட்டாள். அவளுக்கு ஏற்ற தண்டனை அவள்மேல் வந்தது.
11 ௧௧ அவளுடைய தங்கையாகிய அகோலிபாள் இதைக் கண்டும், தன்னுடைய மோகவிகாரத்தில் அவளைவிட கெட்டவளானாள்; தன்னுடைய சகோதரியின் விபசாரங்களிலும் தன்னுடைய விபசாரங்கள் அதிகமானது.
“அவளுடைய தங்கை ஒகோலிபாள் இதைக் கண்டபோதிலும், மோகத்திலும் விபசாரத்திலும் தன் சகோதரியையும் மிஞ்சினவளானாள்.
12 ௧௨ மகா அலங்கார உடுப்புள்ள தலைவர்களும், அதிபதிகளும், குதிரை வீரரும், அழகுமுள்ள வாலிபர்களுமான அருகிலுள்ள தேசத்தாராகிய அசீரியர்களின்மேல் ஆசைக்கொண்டாள்.
அவளும் ஆளுநர்கள், அதிபதிகள், அலங்கார உடை உடுத்திய வீரர், குதிரைவீரர், திடகாத்திரமான வாலிபர் ஆகிய அசீரியரோடு மோகங்கொண்டாள்.
13 ௧௩ அவளும் அசுத்தமானாள் என்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில் போனார்கள் என்றும் கண்டேன்.
அவளும் தன்னை கறைப்படுத்திக் கொண்டாள் என்பதையும், இருவரும் ஒரே வழியில் சென்றுவிட்டார்கள் என்பதையும் நான் கண்டேன்.
14 ௧௪ அவள் தன்னுடைய விபசாரங்களில் அதிகரித்தாள்; சுவரில் சிவப்பு நிறத்தால் வரையப்பட்ட கல்தேய ஆண்களின் உருவங்களைக் கண்டாள்.
“ஆனால் ஒகோலிபாளோ, மென்மேலும் விபசாரம் செய்தாள். சுவரில் வரையப்பட்ட மனித உருவங்களை அவள் கண்டாள். அவை சிவப்பு நிறமாய் வரையப்பட்ட பாபிலோனியரின் உருவங்களாயிருந்தன.
15 ௧௫ அவர்கள் எல்லோரும் தங்களுடைய பிறப்பிடமான கல்தேயாவில் உள்ள பாபிலோனியர்களைப் போல தங்களுடைய இடுப்பில் வார்க்கச்சை கட்டினவர்களும், தங்களுடைய தலைகளில் வண்ணம் தீட்டப்பட்ட பெரிய தலைப்பாகைகளை அணிந்தவர்களும், பார்வைக்கு படைத்தலைவர்களைப்போல தோற்றமுள்ளவர்களாக இருந்தார்கள்.
அவை தங்கள் அரைகளில் கச்சைகளைக் கட்டி, தலைகளில் வண்ணம் தீட்டப்பட்ட பெரிய தலைப்பாகைகளைத் தரித்தவர்களும், கல்தேயா நாட்டிலுள்ள பாபிலோனிய தேர்ப்படை அதிகாரிகளைப்போன்ற தோற்றம்முள்ளவர்களாக இருந்தார்கள்.
16 ௧௬ அவளுடைய கண்கள் அவர்களைப் பார்த்தவுடனே, அவள் அவர்கள்மேல் ஆசைவைத்து, கல்தேயாவுக்கு அவர்கள் அருகிலே தூதுவர்களை அனுப்பினாள்.
அவள் அந்த உருவங்களைப் பார்த்தவுடனேயே அவர்கள்மேல் மோகங்கொண்டு பாபிலோனிய நாட்டிற்கு அவர்களிடம் தூதுவர்களை அனுப்பினாள்.
17 ௧௭ அப்பொழுது பாபிலோனியர்கள் அவள் அருகிலே வந்து காமத்திற்கு, தங்களுடைய விபசாரத்தால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; அவள் இவர்களால் தீட்டுப்பட்டுப்போனபின்பு, அவளுடைய மனது அவர்களை விட்டுப் பிரிந்தது.
அப்பொழுது பாபிலோனியர் அவளிடம், அவளுடைய காதல் படுக்கைக்கு வந்து, தங்களுடைய காமத்தினால் அவளைக் கறைப்படுத்தினார்கள். அவர்களால் அவள் கறைப்பட்ட பின்னர், அவள் வெறுப்பினால் அவர்களிடமிருந்து திரும்பிக்கொண்டாள்.
18 ௧௮ இவ்விதமாக அவள் தன்னுடைய விபசாரங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என்னுடைய மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரிந்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது.
அவள் தன் விபசாரத்தை வெளிப்படையாகச் செய்து, தனது நிர்வாணத்தை வெளிப்படுத்தியபோது, நான் வெறுப்பினால் அவளுடைய சகோதரியை விட்டுத் திரும்பியதுபோலவே அவளையும் விட்டுத் திரும்பினேன்.
19 ௧௯ அவள் எகிப்துதேசத்திலே விபசாரம்செய்த தன்னுடைய வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன்னுடைய விபசாரங்களில் அதிகரித்துப்போனாள்.
ஆனாலும், அவள் எகிப்தில் விபசாரம் செய்த, தன் இளமையின் நாட்களை எண்ணி மென்மேலும் விபசாரம் செய்தாள்.
20 ௨0 கழுதையின் உறுப்புப்போல உறுப்பும், குதிரையின் விந்தைப்போன்ற விந்துள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாக இருக்கும்படி அவர்கள்மேல் ஆசைவைத்தாள்.
அங்கே அவள் தனது காதலர்மேல் மோகங்கொண்டாள். அவர்களின் பாலியல் உறுப்பு கழுதையின் உறுப்புகள்போலவும், விந்து குதிரைகளின் விந்துபோலவும் இருந்தன.
21 ௨௧ எகிப்தியர்களால் உன்னுடைய கன்னிமையின் மார்பகங்களாகிய முலைக்காம்புகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன்னுடைய வாலிபத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.
இவ்வாறாக எகிப்தில் உன் மார்பகங்கள் தடவப்பட்டு, உன் இளமையின் மார்புகள் வருடப்பட்ட உனது இளமையின் வேசித்தனத்தின் காலத்தை நாடினாய்.
22 ௨௨ ஆகையால், அகோலிபாளே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன்னுடைய மனது விட்டுப்பிரிந்த உன்னை நேசித்தவர்களை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும் வரச்செய்வேன்.
“ஆகையால் ஒகோலிபாளே, ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நீ வெறுப்பினால் விட்டுத் திரும்பிய உன் காதலர்களை நான் உனக்கு விரோதமாய் எழுப்புவேன். எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்களை உனக்கெதிராய்க் கொண்டுவருவேன்.
23 ௨௩ அழகுள்ள வாலிபர்களும், தலைவர்களும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரர்களுமாகிய பெயர்பெற்ற பிரபுக்களான பாபிலோனியர்களையும், கல்தேயர்கள் எல்லோரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனிதர்களையும் அவர்களுடன் அசீரியர்கள் எல்லோரையும் வரச்செய்வேன்.
பாபிலோனியரையும், எல்லாக் கல்தேயரையும், பேகோட், ஷோவா, கோவா மனிதரையும், அசீரியர் அனைவரையும், திடகாத்திரமான வாலிபரையும் கொண்டுவருவேன். அவர்கள் அனைவருமே ஆளுநர்களும், அதிகாரிகளும், தேர் வீரர்களும், உயர்பதவியிலுள்ள மனிதர்களும், குதிரைகளில் ஏறிச் செல்லுகிறவர்களுமாய் இருக்கிறார்கள்.
24 ௨௪ அவர்கள் வண்டிகளுடனும், இரதங்களுடனும், இயந்திரங்களுடனும், மக்கள்கூட்டத்துடனும், கேடகங்களும், சிரியகேடகங்களும், தலைச்சீராக்களும் அணிந்தவர்களாக, உனக்கு விரோதமாக வந்து, உன்னை சுற்றிலும் முகாமிடுவார்கள்; அவர்களுக்கு முன்னே நான் நியாயத்தை விளங்கச்செய்வேன்; அவர்கள் தங்களுடைய நியாயங்களின்படி உன்னை நியாயந்தீர்ப்பார்கள்.
அவர்கள் படைக்கலங்களோடும், தேர்களோடும், வண்டிகளோடும், ஏராளமான மக்களோடும் உனக்கு விரோதமாய் வருவார்கள். அவர்கள் பெரிதும் சிறிதுமான கேடயங்களோடும், தலைக்கவசங்களோடும், எல்லாத் திசைகளிலும் உனக்கு விரோதமாய் எதிர்த்து நிற்பார்கள். நீ தண்டிக்கப்படுவதற்காக நான் உன்னை அவர்களிடம் ஒப்படைப்பேன். அவர்கள் தங்களுடைய விதிமுறைப்படி உனக்குத் தண்டனை வழங்குவார்கள்.
25 ௨௫ உனக்கு விரோதமாக என்னுடைய எரிச்சலை வெளிப்படுத்துவேன்; அவர்கள் உன்னை கடுங்கோபமாக நடத்தி, உன்னுடைய மூக்கையும் உன்னுடைய காதுகளையும் அறுத்துப்போடுவார்கள்; உன்னில் மீதியாக இருப்பவர்கள் வாளால் வெட்டப்பட்டுபோவார்கள்; அவர்கள் உன்னுடைய மகன்களையும் உன்னுடைய மகள்களையும் பிடித்துக்கொள்ளுவார்கள்; உன்னில் மீதியாக இருப்பவர்கள் நெருப்புக்கு இரையாவார்கள்.
நான் என் எரிச்சலின் கோபத்தை உனக்கு விரோதமாய்த் திருப்புவேன். அவர்கள் உன்னை ஆவேசத்துடன் நடத்துவார்கள். உன் மூக்கையும் காதுகளையும் அறுத்துவிடுவார்கள். உன்னில் எஞ்சியிருப்போர் வாளினால் மடிவார்கள். அவர்கள் உன் மகன்களையும் மகள்களையும் கைதிகளாகக் கொண்டுபோவார்கள். இன்னும் உன்னில் எஞ்சியிருப்போர் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுவார்கள்.
26 ௨௬ அவர்கள் உன்னுடைய ஆடைகளை கழற்றி, உன்னுடைய அழகான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள்.
அவர்கள் உன் ஆடைகளை கழற்றி, உனது சிறப்பான நகைகளையும் பறித்துக்கொள்வார்கள்.
27 ௨௭ இப்படியாக உன்னுடைய முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவங்கின உன்னுடைய விபசாரத்தையும் ஒழியச்செய்வேன்; நீ இனி அவர்களை பார்க்க உன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும், எகிப்தை நினைக்காமலும் இருப்பாய்.
இவ்விதமாய் உன் இழிவான செயல்களுக்கும், எகிப்தில் நீ ஆரம்பித்த விபசாரத்திற்கும் நான் முடிவைக் கொண்டுவருவேன். இனிமேல் நீ எகிப்தை நினைக்கவோ, இக்காரியங்களை ஆவலோடு விரும்பவோ மாட்டாய்.
28 ௨௮ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன்னுடைய மனம்விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன்னுடைய மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் உன்னை நான் ஒப்புக்கொடுக்கப்போகிறேன்.
29 ௨௯ அவர்கள் உன்னை வெறுப்பாக நடத்தி, உன்னுடைய உழைப்பின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னை முழுவதும் நிர்வாணமாக்கிவிடுவார்கள்; அப்படியே உன்னுடைய வெட்கக்கேடும் உன்னுடைய முறைகேடுமான உன்னுடைய விபசாரத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும்.
அவர்கள் உன்னை வெறுப்புடன் நடத்தி, நீ முயற்சித்துத் தேடிய அனைத்தையும் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உன்னை நிர்வாணமும், வெறுமையுமாக்கி விடுவார்கள். உன் வேசித்தனத்தின் வெட்கம் வெளிக்காட்டப்படும். உன் இழிவான நடத்தையும் உன் கட்டுப்பாடற்ற தன்மையுமே இதை உனக்கு வருவித்தன.
30 ௩0 நீ அந்நியதேசங்களைப் பின்தொடர்ந்து, அவர்களுடைய அசுத்தமான சிலைகளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன்னுடைய விபசாரத்தினால் இவைகள் உனக்குச் செய்யப்படும்.
ஏனெனில், நீ பல நாடுகளையும் மோகித்து, அவர்களுடைய சிலைகளினால் உன்னை கறைப்படுத்திக்கொண்டாய்.
31 ௩௧ உன்னுடைய சகோதரியின் வழியிலே நீ நடந்தாய்; ஆகையால் அவளுடைய பாத்திரத்தை உன்னுடைய கையிலே கொடுப்பேன்.
நீயும் உன் சகோதரியின் வழியிலேயே போயிருக்கிறாய். ஆதலால், நான் அவளது தண்டனையின் பாத்திரத்தை உனது கையில் வைப்பேன்.
32 ௩௨ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன்னுடைய சகோதரியினுடைய ஆழமும் அகலமுமானதும் நிறைய வார்க்கப்பட்டதுமான பாத்திரத்தைக் குடித்து, நகைப்பும் பரியாசமுமாவாய்.
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “நீ உன் சகோதரியின் பாத்திரத்திலே குடிப்பாய், அது அகலமும், ஆழமுமானது. அது அதிகமாய்க் கொள்கிற பாத்திரமானதால் அது ஏளனத்தையும் நகைப்பையும் கொண்டுவரும்.
33 ௩௩ சமாரியா என்னும் உன்னுடைய சகோதரியினுடைய பாத்திரமாக இருக்கிற துயரமும் அழிவும் என்கிற பாத்திரத்தால் வெறியினாலும் சஞ்சலத்தினாலும் நிறையப்படுவாய்.
நீ கவலை மிகுதியினால் மதுபோதையினால் நிரப்பப்பட்டவனைப் போலாவாய். அது உன் சகோதரியாகிய சமாரியாவிற்கு ஏற்பட்ட அழிவும் பாழும் நிறைந்த பாத்திரம் போலிருக்கும்.
34 ௩௪ நீ அதில் இருக்கிறதைக் குடித்து, உறிஞ்சி, அதின் ஓடுகளை உடைத்துப்போட்டு, உன்னுடைய மார்பகங்களைக் கீறிக்கொள்வாய்; நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
நீ அதைக் குடித்து வெறுமையாக்குவாய். அதை நீ துண்டுகளாக்கி உன் மார்பகங்களையே கிழித்துக் கொள்ளுவாய். நானே இதைச் சொன்னேன், என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
35 ௩௫ ஆகையால், நீ என்னை மறந்து, என்னை உனக்கு வெளியே தள்ளிவிட்டதற்காக, நீ உன்னுடைய முறைகேட்டையும் உன்னுடைய விபசாரங்களையும் சுமப்பாய் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
“ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீ என்னை மறந்து, என்னைப் புறக்கணித்துவிட்டபடியால் உன் இழிவான செயல்களினாலும், வேசித்தனத்தினாலும் உன் பலனை நீ அனுபவிக்கவேண்டும்.”
36 ௩௬ பின்னும் யெகோவா என்னை நோக்கி: மனிதகுமாரனே. நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காட மனதிருந்தால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் எடுத்துக்காட்டு.
யெகோவா என்னிடம் சொன்னதாவது, “மனுபுத்திரனே, நீ ஒகோலாளையும், ஒகோலிபாளையும் நியாயந்தீர்பாயோ? அப்படியானால், அவர்களுடைய அருவருக்கத்தக்க செயல்களை அவர்களுக்கு எடுத்துக்காட்டு.
37 ௩௭ அவர்கள் விபசாரம்செய்தார்கள்; அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்களுடைய அசுத்தமான சிலைகளுடன் விபசாரம்செய்து, தாங்கள் எனக்குப்பெற்ற தங்களுடைய பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீயில் பலியிட்டார்கள்.
அவர்கள் விபசாரம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய கைகளில் இரத்தக்கறை இருக்கிறது. அவர்கள் தங்கள் விக்கிரகங்களுடன் விபசாரம் செய்திருக்கிறார்கள். அவர்கள் எனக்குப் பெற்ற பிள்ளைகளைக்கூட அவைகளுக்கு உணவாகப் பலியிட்டார்கள்.
38 ௩௮ அன்றியும் அவர்கள் என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தை அந்தநாளிலேதானே தீட்டுப்படுத்தி, என்னுடைய ஓய்வு நாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.
மேலும், அவர்கள் இதையும் எனக்கெதிராகச் செய்தார்கள். அதாவது, அதே வேளையிலேயே எனது பரிசுத்த இடத்தையும் அசுத்தப்படுத்தி, என் ஓய்வுநாளையும் தூய்மையற்றதாக்கினார்கள்.
39 ௩௯ அவர்கள் தங்களுடைய பிள்ளைகளைத் தங்களுடைய அசுத்தமான சிலைகளுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்த நாளில்தானே அதற்குள் நுழைந்தார்கள்; இதோ, என்னுடைய ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்.
தங்கள் பிள்ளைகளைத் தங்கள் விக்கிரகங்களுக்குப் பலியிட்ட அதே நாளிலேயே அவர்கள் எனது பரிசுத்த இடத்திற்குள் வந்து அதைத் தூய்மையற்றதாக்கினார்கள். அவர்கள் அதைத்தான் எனது வீட்டில் செய்தார்கள்.
40 ௪0 இதுவும் இல்லாமல், தூரத்திலுள்ள ஆண்களிடத்திற்குத் தூது அனுப்பி, அவர்களை வரவழைத்தார்கள், அவர்கள் வந்தார்கள்; அவர்களுக்கென்று நீ குளித்து, உன்னுடைய கண்களில் மையிட்டுக்கொண்டு ஆபரணங்களால் உன்னை அலங்கரித்து,
“மேலும் அவர்கள் வெகுதூரத்திலிருந்து வந்த மனிதர்களுக்குத் தூதுவர்களை அனுப்பினார்கள். அவர்கள் வந்தபோது, நீ அவர்களுக்காகக் குளித்து, உன் கண்களுக்கு மையிட்டு, நகைகளையும் போட்டுக்கொண்டாய்.
41 ௪௧ சிறந்த கட்டிலின்மேல் உட்கார்ந்துகொண்டாய்; அதின் முன்னே ஒரு பீடம் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது; என்னுடைய தூபவர்க்கத்தையும் என்னுடைய எண்ணெயையும் அதின்மேல் வைத்தாய்.
அழகான இருக்கையில் அமர்ந்தாய். அதற்கு முன்னே ஒரு விருந்துக்கான மேஜையை ஆயத்தப்படுத்தி, அத்துடன் எனக்குரியதான வாசனைப் பொருள்களையும் எண்ணெயையும் வைத்தாய்.
42 ௪௨ அவளிடத்திலே அந்தச் கூட்டத்தின் இரைச்சல் அடங்கின பின்பு, மக்கள் கூட்டமான ஆண்களையும் அழைத்தனுப்பினார்கள்; குடிகாரர்கள் வனாந்திரத்திலிருந்து கொண்டுவரப்பட்டார்கள்; இவர்கள் அவர்களுடைய கைகளில் காப்புகளையும் அவர்களுடைய தலைகளில் அலங்காரமான கிரீடங்களையும் போட்டார்கள்.
“கவலையற்ற ஒரு கூட்டத்தின் ஆரவாரம் அவளைச்சுற்றி இருந்தது. அந்த ஒழுங்கீனமான கூட்டத்தோடு பாலைவனத்தின் சபேயர்களும் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் அப்பெண்ணுக்கும், அவளது சகோதரிக்கும் கைகளில் வளையல்களை அணிவித்து, அவர்களுடைய தலைகளில் அழகிய மகுடங்களைச் சூட்டினார்கள்.
43 ௪௩ விபசாரங்களில் கிழவியானவளைக் குறித்து அவள் இன்னும் தன்னுடைய விபசாரங்களைச் செய்வாளோ என்றேன்.
பின்பு நான் விபசாரத்தில் களைத்துப்போன அவளைக்குறித்து, ‘அவள் வேசிதானே! அவர்கள் அவளை அப்படியே பயன்படுத்தட்டும்’ என்றேன்.
44 ௪௪ விபசாரிகளிடத்திலே போவதுபோல அவளிடத்தில் போனார்கள்; இப்படியாக முறைகேடானவர்களாகிய அகோலாளிடத்திலும் அகோலிபாளிடத்திலும் போனார்கள்.
அவர்கள் அவளோடு உறவுகொண்டார்கள். மனிதர்கள் வேசியிடம் நடந்துகொள்வதுபோல, காமவேட்கையுள்ள ஒகோலாள், ஒகோலிபாள் என்னும் பெண்களிடமும் நடந்துகொண்டார்கள்.
45 ௪௫ ஆகையால், விபசாரிகளை நியாயந்தீர்க்கிறபடியாகவும், இரத்தம்சிந்தும் பெண்களை நியாயந்தீர்க்கிறபடியாகவும், நீதிமான்கள் அவர்களை நியாயந்தீர்ப்பார்கள்; அவர்கள் விபசாரிகள், அவர்களுடைய கைகளில் இரத்தம் இருக்கிறது.
ஆனால் விபசாரம் செய்து இரத்தம் சிந்தும் பெண்களைத் தண்டிப்பதுபோல, நீதியுள்ள மனிதர் அவர்களைத் தண்டிப்பார்கள். ஏனெனில் அவர்கள் விபசாரிகள், அவர்கள் கைகளில் இரத்தம் படிந்திருக்கிறது.
46 ௪௬ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு விரோதமாக ஒரு கூட்டத்தை வரச்செய்து, அவர்களை அலைச்சலுக்கும் கொள்ளைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அவர்களுக்கு விரோதமாய் ஒரு கலகக்கூட்டத்தைக் கொண்டுவாருங்கள். கொள்ளையையும் திகிலையும் அவர்களுக்கு மேலாகக் கொண்டுவாருங்கள்.
47 ௪௭ அந்தக் கூட்டத்தார் அவர்களைக் கல்லெறிந்து, தங்களுடைய வாளால் வெட்டிப்போடுவார்கள்; அவர்களுடைய மகன்களையும் அவர்களுடைய மகள்களையும் கொன்று, அவர்களுடைய வீடுகளை நெருப்பால் சுட்டெரிப்பார்கள்.
அந்தக் கலகக்கூட்டம் அவர்களைக் கல்லெறிந்து தங்கள் வாள்களால் அவர்களை வெட்டி வீழ்த்தும். அவர்களுடைய மகன்களையும், மகள்களையும் அவர்கள் கொன்று, அவர்களுடைய வீடுகளை எரிப்பார்கள்.
48 ௪௮ இவ்விதமாக எல்லா பெண்களும் புத்தியடைந்து, உங்களுடைய முறைகேடுகளைச் செய்யாதிருக்கும்படி, முறைகேட்டைத் தேசத்தைவிட்டு ஒழியச்செய்வேன்.
“இவ்விதமாய் நான் நாட்டிலுள்ள காம வேட்கைக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். அதனால் எல்லாப் பெண்களுமே எச்சரிப்படைந்து உன்னைப் பின்பற்றாதிருப்பார்கள்.
49 ௪௯ உங்களுடைய முறைகேட்டை உங்கள்மேல் சுமத்துவார்கள்; அப்பொழுது நீங்கள் உங்களுடைய அசுத்தமான சிலைகளை வணங்கிய பாவங்களைச் சுமந்து, நான் யெகோவாகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள்.
உங்களுடைய காம வேட்கைக்குரிய தண்டனையையும் உங்கள் விக்கிரகவழிபாட்டுப் பாவங்களுக்குரிய பலனையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். அப்பொழுது ஆண்டவராகிய யெகோவா நானே என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்றார்.”

< எசேக்கியேல் 23 >