< 2 சாமுவேல் 16 >

1 தாவீது மலை உச்சியிலிருந்து சற்றுதூரம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் வேலைக்காரனான சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனை சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், உலர்ந்த நூறு திராட்சைப்பழக் குலைகளும், வசந்தகாலத்து கனிகளான நூறு அத்திக் குலைகளும், ஒரு தோல்பை திராட்சைரசமும் இருந்தது.
தாவீது மலையுச்சிக்கு அப்பால் சிறிது தூரம் சென்றபோது மேவிபோசேத்தின் பராமரிப்பாளனான சீபா, அவனைச் சந்திப்பதற்காக அங்கே வந்து காத்திருந்தான். அவன் இருநூறு அப்பங்களையும், நூறு முந்திரி அடைகளையும், இருநூறு அத்திப்பழ அடைகளையும், ஒரு திராட்சை இரசக் குடுவையையும் கழுதைகளின்மேல் ஏற்றிக்கொண்டு வந்திருந்தான்.
2 ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் எதற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் குடும்பத்தார்கள் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும், வாலிபர்கள் சாப்பிடுவதற்கும், திராட்சைரசம் வனாந்திரத்தில் களைத்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.
அப்பொழுது அரசன் சீபாவிடம், “ஏன் இவற்றையெல்லாம் கொண்டுவந்தாய்?” என்று கேட்டான். அதற்கு சீபா, “அரச குடும்பத்தார் ஏறிச் செல்வதற்கு கழுதைகளையும், மனிதர் சாப்பிடுவதற்கு அப்பங்களையும், பழங்களையும், பாலைவனத்தில் களைப்படைந்தவர்களை உற்சாகப்படுத்த திராட்சை இரசத்தையும் கொண்டுவந்திருக்கிறேன்” என்றான்.
3 அப்பொழுது ராஜா: உன் ஆண்டவனுடைய மகன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் குடும்பத்தார்கள் என் தகப்பனுடைய ராஜ்ஜியத்தை என் பக்கமாகத் திரும்பச்செய்வார்கள் என்றான் என்று சொன்னான்.
அதைக்கேட்ட அரசன் அவனிடம், “உன் எஜமானின் பேரன் மேவிபோசேத் எங்கே” என்று கேட்டான். அதற்கு சீபா, “அவர் எருசலேமில் இருக்கிறார்; ‘இன்று இஸ்ரயேல் மக்கள் என் பாட்டனான சவுலின் அரசாட்சியை எனக்குத் திரும்பவும் கொடுப்பார்கள்’ என்று எண்ணுகிறார்” என்றான்.
4 அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உரியதையெல்லாம் உனக்கு தருகிறேன் என்றான். அதற்குச் சீபா: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
அரசன் சீபாவிடம், “மேவிபோசேத்துக்கு உரிமையானவைகளெல்லாம் இப்பொழுது உனக்கு உரிமையானவைகளே” என்றான். அப்பொழுது சீபா, “என் தலைவனாகிய அரசனிடம் எனக்குத் தொடர்ந்து தயவு கிடைக்கட்டும். நான் தாழ்மையுடன் வணங்குகிறேன்” என்று சொன்னான்.
5 தாவீது ராஜா பகூரிம்வரை வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாக இருக்கிற கேராவின் மகனான சீமேயி என்னும் பெயருள்ள ஒரு மனிதன் அங்கேயிருந்து புறப்பட்டு, சபித்துக்கொண்டே நடந்துவந்து,
தாவீது அரசன் பகூரிமை நெருங்குகையில் அங்கேயிருந்த சவுலின் குடும்பத்தின் வம்சத்தைச் சேர்ந்த கேராவின் மகன் சீமேயி என்னும் ஒருவன் வந்தான். அவன் தாவீதை சபித்துக்கொண்டே வந்தான்.
6 எல்லா மக்களும், எல்லா பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கும்போது, தாவீதின்மேலும், தாவீது ராஜாவுடைய எல்லா அதிகாரிகளின் மேலும் கற்களை எறிந்தான்.
தாவீதின் இடது புறமும், வலது புறமும் இராணுவவீரரும், விசேஷ காவலாட்களும் இருந்தபோதிலுங்கூட சீமேயி அரசனாகிய தாவீதுக்கும், அவனுடைய பணியாட்களுக்கும் கற்களை எறிந்தான்.
7 சீமேயி அவனை சபித்து: இரத்தப்பிரியனே, பாவியான மனிதனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.
சீமேயி தாவீதைச் சபித்து, “இரத்த வெறியனே போய்விடு, கொலைபாதகனே தொலைந்து போ.
8 சவுலின் இடத்தில் ராஜாவான உன்மேல் யெகோவா சவுல் குடும்பத்தார்களின் இரத்தப்பழியைத் திரும்பச் செய்வார்; யெகோவா ராஜ்ஜியபாரத்தை உன்னுடைய மகனான அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன்னுடைய அக்கிரமத்தில் சிக்கிக்கொண்டாய்; நீ இரத்தப்பிரியனான மனிதன் என்றான்.
நீ சவுலின் குடும்பத்தில் சிந்திய இரத்தத்திற்காக யெகோவா உன்னைத் தண்டித்திருக்கிறார். அவனுடைய இடத்தில்தான் நீ ஆளுகை செய்தாயே. யெகோவா அரசாட்சியை உன் மகன் அப்சலோமுக்குக் கொடுத்தார். நீ ஒரு இரத்த வெறியன். எனவேதான் உனக்கு அழிவு வந்திருக்கிறது” என்றான்.
9 அப்பொழுது செருயாவின் மகன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ராஜாவான என்னுடைய ஆண்டவனை ஏன் சபிக்கவேண்டும்? நான் போய் அவனுடைய தலையை வெட்டிப்போடட்டும் என்றான்.
அப்பொழுது செருயாவின் மகன் அபிசாய் அரசனிடம், “இந்த செத்த நாய் என் தலைவனாகிய அரசனை சபிப்பானேன். நான் போய் அவன் தலையை வெட்டிவிட அனுமதியும்” என்றான்.
10 ௧0 அதற்கு ராஜா: செருயாவின் மகன்களே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னை சபிக்கட்டும்; தாவீதை சபிக்கவேண்டும் என்று யெகோவா அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்பவன் யார் என்றான்.
ஆனால் அரசனோ, “செருயாவின் மகன்களே! உங்களுக்கும் எனக்கும் இதில் பொதுவாக என்ன இருக்கிறது? யெகோவா சீமேயினிடம், ‘தாவீதைச் சபிக்கவேண்டும்’ என்று கட்டளையிட்டபடியால், அவன் சபித்திருக்க வேண்டும். எனவே அவனிடம், ‘ஏன் இப்படி செய்தாய்?’ என யார் கேட்கலாம்” என்றான்.
11 ௧௧ பின்னும் தாவீது அபிசாயையும் தன்னுடைய வேலைக்காரர்கள் எல்லோரையும் பார்த்து: இதோ, என்னுடைய கர்ப்பத்தின் பிறப்பான என்னுடைய மகனே என்னுடைய உயிரை எடுக்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாகச் செய்வான், அவன் சபிக்கட்டும்; அப்படிச் செய்ய யெகோவா அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
மேலும் தாவீது அபிசாயிடமும், அவன் பணியாட்களிடமும், “என் சொந்த மாம்சமான என் மகனே என் உயிரை எடுக்க முயலும்போது, இந்த பென்யமீனியன் எவ்வளவு அதிகமாய் செய்யக்கூடும். அவனைவிட்டுவிடுங்கள். அவன் என்னைச் சபிக்கட்டும். யெகோவா அப்படிச் சொல்லியிருக்கிறார்.
12 ௧௨ ஒருவேளை யெகோவா என்னுடைய சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் சபித்த சாபத்திற்குப் பதிலாக எனக்கு நன்மை செய்வார் என்றான்.
ஒருவேளை நான் படும் துன்பங்களை யெகோவா பார்த்து இன்று எனக்குக் கிடைத்த சாபத்திற்குப் பதிலாக நன்மை செய்யக்கூடும்” என்றான்.
13 ௧௩ அப்படியே தாவீதும் அவனுடைய மனிதர்களும் வழியிலே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து சபித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.
ஆகவே தாவீதும் அவனோடிருந்த மனிதரும் தொடர்ந்து தம் வழியே போனார்கள். சீமேயி மலைப் பக்கமாக தாவீதிற்கு எதிர்த்திசையில் போனான். அவன் தாவீதைச் சபித்துக்கொண்டும், கல்லெறிந்து கொண்டும், தாவீதின்மேல் மண்ணை வீசிக்கொண்டும் போனான்.
14 ௧௪ ராஜாவும் அவனோடு இருந்த எல்லா மக்களும் களைத்தவர்களாக, தங்குமிடத்திலே சேர்ந்து, இளைப்பாறினார்கள்.
அரசனும் அவனோடிருந்த மக்களும் களைப்புடன் தாங்கள் போகவேண்டிய இடத்தை வந்தடைந்தார்கள். அங்கே அவன் இளைப்பாறி பெலனடைந்தான்.
15 ௧௫ அப்சலோமும் இஸ்ரவேல் மனிதர்களான எல்லா மக்களும் அவனோடு அகித்தோப்பேலும் எருசலேமிற்கு வந்தார்கள்.
இதற்கிடையில் அப்சலோமும், இஸ்ரயேல் மனிதர்களும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர்களுடன் அகிதோப்பேலும் இருந்தான்.
16 ௧௬ அற்கியனான ஊசாய் என்னும் தாவீதின் நண்பன் அப்சலோமிடத்தில் வந்தபோது, ஊசாய் அப்சலோமை நோக்கி: ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான்.
அதன்பின்பு அர்கியனான ஊசாய் என்னும் தாவீதின் சிநேகிதன் அப்சலோமிடம் போய், “அரசே நீடூழி வாழ்க! அரசே நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தினான்.
17 ௧௭ அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன்னுடைய நண்பன்மேல் உனக்கு இருக்கிற தயவு இதுதானோ? உன்னுடைய நண்பனோடு நீ போகாமல்போனது என்ன என்று கேட்டான்.
அதற்கு அப்சலோம் ஊசாயிடம், “உன் நண்பனுக்கு நீ காட்டும் அன்பு இவ்வளவுதானா? உன் நண்பனோடு நீ ஏன் போகவில்லை” எனக் கேட்டான்.
18 ௧௮ அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, யெகோவாவும் இந்த மக்களும் இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரோடு நான் சேர்ந்து அவரோடு இருப்பேன்.
அதற்கு, ஊசாய் அப்சலோமிடம், “அப்படியல்ல; யெகோவாவினாலும் இந்த மக்களாலும் இஸ்ரயேல் மனிதர்கள் அனைவராலும் தெரிந்துகொள்ளப்பட்டவருடனேயே நான் இருப்பேன். அவருடனேயே நான் எப்போதும் இருப்பேன்.
19 ௧௯ இதுவும் அல்லாமல், நான் யாருக்கு பணிவிடை செய்வேன்? அவருடைய மகனிடம் தானே? உம்முடைய தகப்பனிடம் எப்படி பணிவிடை செய்தோனோ, அப்படியே உம்மிடமும் பணிவிடை செய்வேன் என்றான்.
அன்றியும் நான் யாருக்குப் பணிபுரிய வேண்டும்; அவருடைய மகனுக்குப் பணிசெய்ய வேண்டாமோ? உமது தகப்பனுக்குப் பணி செய்ததுபோலவே உமக்கும் செய்வேன்” என்றான்.
20 ௨0 அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது என்னவென்று ஆலோசனை சொல்லும் என்றான்.
அப்பொழுது அப்சலோம் அகிதோப்பேலிடம், “நாங்கள் என்ன செய்யவேண்டும் என நீ ஆலோசனை சொல்” என்று கேட்டான்.
21 ௨௧ அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் வைத்துப்போன அவருடைய மறுமனையாட்டிகளிடம் உறவுகொள்ளும், அப்பொழுது உம்முடைய தகப்பனால் வெறுக்கப்பட்டீர் என்பதை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லோருடைய கைகளும் பெலனடையும் என்றான்.
அதற்கு அகிதோப்பேல், “அரண்மனையைப் பராமரிக்க உமது தகப்பன் வைப்பாட்டிகளை விட்டுப் போயிருக்கிறார்; அவர்களுடன் நீர் உறவு வைத்துக்கொள்ளும். இவ்வாறு நீர் செய்து உம்மை உமது தகப்பனுக்கு வெறுப்புக்குரியவனாக்கின செய்தியை இஸ்ரயேலர் எல்லோரும் கேள்விப்படுவார்கள். அப்போது உம்மோடிருப்பவர்கள் இன்னும் பெலப்படுவார்கள்” என ஆலோசனை சொன்னான்.
22 ௨௨ அப்படியே அப்சலோமுக்கு மாடியின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் எல்லா இஸ்ரவேலர்களின் கண்களுக்கும் முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் உறவுகொண்டான்.
எனவே அரண்மனையின் கூரையின்மேல் அப்சலோமுக்காக ஒரு கூடாரம் அமைத்தார்கள். அப்சலோம் இஸ்ரயேல் மக்களனைவரின் முன்னிலையிலும் தன் தகப்பனின் வைப்பாட்டிகளுடன் உறவுகொண்டான்.
23 ௨௩ அந்த நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது; அப்படி அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.
அந்நாட்களில் அகிதோப்பேலின் ஆலோசனை இறைவன் சொல்லும் ஆலோசனையைப்போல் இருந்தது. அதுபோலவே தாவீதும், அப்சலோமும் அகிதோப்பேலின் ஆலோசனைகளைக் கருதினார்கள்.

< 2 சாமுவேல் 16 >