< 2 நாளாகமம் 6 >

1 அப்பொழுது சாலொமோன்: “காரிருளிலே வாசம்செய்வேன் என்று யெகோவா சொன்னார் என்றும், 2 தேவரீர் வாசம்செய்யத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்குவதற்கு ஏற்ற நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன்” என்றும் சொல்லி, 3 ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லோரையும் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார் எல்லோரும் நின்றார்கள். 4 அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தால் நிறைவேற்றினார். 5 அவர்: நான் என் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த நாள்முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்று நான் இஸ்ரவேலுடைய எல்லா கோத்திரங்களிலுமுள்ள வேறே யாதொரு பட்டணத்தைத் தெரிந்துகொள்ளாமலும், என் மக்களாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக இருக்கும்படி வேறே ஒருவரைத் தெரிந்துகொள்ளாமலும், 6 என் நாமம் விளங்கும் இடமாக எருசலேமையும், என் மக்களாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார். 7 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் மனதில் இருந்தது. 8 ஆனாலும் யெகோவா என் தகப்பனாகிய தாவீதை நோக்கி: என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான். 9 ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய்; உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் மகனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார். 10 ௧0 இப்போதும் யெகோவா சொல்லிய தமது வார்த்தையை நிறைவேற்றினார்; யெகோவா சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதுடைய இடத்தில் எழும்பி, இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டி, 11 ௧௧ யெகோவா இஸ்ரவேல் வம்சத்தாருடன் செய்த உடன்படிக்கை இருக்கிற பெட்டியை அதிலே வைத்தேன் என்று சொல்லி. 12 ௧௨ யெகோவாவுடைய பலிபீடத்திற்கு முன்னே இஸ்ரவேல் சபையார் எல்லோருக்கும் எதிரே நின்று தன் கைகளை விரித்தான். 13 ௧௩ சாலொமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான ஒரு வெண்கலப் பிரசங்கபீடத்தை உண்டாக்கி, அதை நடுப்பிராகாரத்திலே வைத்திருந்தான்; அதின்மேல் அவன் நின்று, இஸ்ரவேலின் சபையார் எல்லோருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து: 14 ௧௪ இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, வானத்திலும், பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர். 15 ௧௫ தேவரீர் நீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர்; உம்முடைய கரத்தால் அதை இந்நாளில் இருக்கிறபடி நிறைவேற்றினீர். 16 ௧௬ இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் மகன்களும் என் நியாயப்பிரமாணத்தில் நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் மனிதன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும். 17 ௧௭ இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, தேவரீர் உமது அடியானாகிய தாவீதுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை உண்மையென்று விளங்குவதாக. 18 ௧௮ தேவன் உண்மையாகவே மனிதர்களோடு பூமியிலே குடியிருப்பாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? 19 ௧௯ என் தேவனாகிய யெகோவாவே, உமது அடியேன் உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் உமது மனதில் கொண்டருளும். 20 ௨0 உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன இடமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக. 21 ௨௧ உமது அடியேனும், இந்த இடத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்யும் ஜெபங்களைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே நீர் அதைக் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக. 22 ௨௨ ஒருவன் தன் அயலானுக்குக் குற்றம் செய்திருக்கும்போது, இவன் அவனை ஆணையிடச் சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பாக வந்தால், 23 ௨௩ அப்பொழுது பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரச்செய்து, அவனுக்கு நீதியை சரிக்கட்டவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாகச் செய்து அவனை நீதிமானாக்கவும், உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக. 24 ௨௪ உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததினிமித்தம் எதிரிக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, இந்த ஆலயத்திலே உம்முடைய சந்நிதியில் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால், 25 ௨௫ பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்திற்கு அவர்களைத் திரும்பிவரச்செய்வீராக. 26 ௨௬ அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததால், வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த இடத்திற்கு நேராக விண்ணப்பம் செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, தேவரீர் தங்களைத் துக்கப்படுத்தும்போது தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால், 27 ௨௭ பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது மக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த உம்முடைய தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக. 28 ௨௮ தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவு, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்களுடைய எதிரிகள் அவர்கள் வாசஞ்செய்கிற தேசத்திலே அவர்களை முற்றுகை போடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வந்திருக்கிறபோதும், 29 ௨௯ எந்த மனிதனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய மக்களில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும், 30 ௩0 உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து, 31 ௩௧ தேவரீர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்கு பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுப்புத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே அவனவனுடைய அனைத்து வழிகளுக்கும் ஏற்றபடிச் செய்து பலன் அளிப்பீராக. 32 ௩௨ உம்முடைய மக்களாகிய இஸ்ரவேல் மக்களல்லாத அந்நிய மக்கள் உம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தமும், உம்முடைய பலத்த கரத்தினிமித்தமும், ஓங்கிய உம்முடைய புயத்தினிமித்தமும், தூரதேசங்களிலிருந்து வந்து, இந்த ஆலயத்திற்கு நேராக நின்று விண்ணப்பம்செய்தால், 33 ௩௩ உமது வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அதைக்கேட்டு, பூமியின் மக்களெல்லோரும் உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலைப்போல, உம்முடைய நாமத்தை அறிந்து உமக்கு பயப்பட்டு, நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் சூட்டப்பட்டதென்று அறியும்படிக்கு, அந்த அந்நிய மனிதன் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியே தேவரீர் செய்வீராக. 34 ௩௪ நீர் உம்முடைய மக்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் எதிரிகளோடு போர்செய்யப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக விண்ணப்பம்செய்தால், 35 ௩௫ பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக. 36 ௩௬ பாவம் செய்யாத மனிதன் இல்லையே; ஆகையால் அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் எதிரிகளின் கையில் அவர்களை ஒப்புக்கொடுக்கிறதால், அவர்களைச் சிறைபிடிக்கிறவர்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குக் கொண்டுபோயிருக்கும்போது, 37 ௩௭ அவர்கள் சிறைபட்டுப்போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவம்செய்து அக்கிரமம்செய்து, துன்மார்க்கமாக நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி, 38 ௩௮ தாங்கள் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்ட தங்கள் சிறையிருப்பான தேசத்திலே, தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்செய்தால், 39 ௩௯ உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங்களையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உமக்கு விரோதமாகப் பாவம்செய்த உம்முடைய மக்களுக்கு மன்னித்தருளும். 40 ௪0 இப்போதும் என் தேவனே, இந்த இடத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக. 41 ௪௧ தேவனாகிய யெகோவாவே, உம்முடைய தங்கும் ஸ்தலத்திற்கு தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்; தேவனாகிய யெகோவாவே, உமது ஆசாரியர்கள் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக. 42 ௪௨ தேவனாகிய யெகோவாவே, நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தைப் புறக்கணிக்காமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்செய்த கிருபைகளை நினைத்தருளும்” என்றான்.

< 2 நாளாகமம் 6 >