< 1 தெசலோனிக்கேயர் 1 >

1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 2 தேவனுக்குப் பிரியமான சகோதரர்களே, உங்களுடைய விசுவாசத்தின் செயல்களையும், உங்களுடைய அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்களுடைய நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து, 3 நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து, 4 எங்களுடைய ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து வேண்டுதல்செய்து, உங்களெல்லோருக்காகவும் எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். 5 எங்களுடைய நற்செய்தி உங்களிடம் வசனத்தோடுமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியானவரோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்களுக்காக எப்படிப்பட்டவர்களாக இருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே. 6 நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியானவரின் மகிழ்ச்சியோடு, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, 7 இவ்விதமாக மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் அனைவருக்கும் மாதிரிகளானீர்கள். 8 எப்படியென்றால், உங்களிடமிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் பரவியதுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாக இல்லாதபடிக்கு, தேவனைப்பற்றின உங்களுடைய விசுவாசம் எல்லா இடங்களிலும் பிரசித்தமானது. 9 ஏனென்றால், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடம் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு, நீங்கள் சிலை வழிபாடுகளைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், 10 ௧0 அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவரும், இனிவரும் கோபத்திலிருந்து நம்மை விடுவித்து இரட்சிக்கிறவருமாக இருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும் அறிவிக்கிறார்களே.

< 1 தெசலோனிக்கேயர் 1 >