< உன்னதப்பாட்டு 1 >

1 சாலொமோனின் உன்னதப்பாட்டு. 2 அவர் தமது வாயின் முத்தங்களினால் என்னை முத்தமிடுவாராக; ஏனெனில் உமது அன்பு திராட்சை இரசத்தைப் பார்க்கிலும் அதிக இன்பமாயிருக்கிறது. 3 உமது வாசனைத் தைலங்களின் நறுமணம் இன்பம் தருகிறது; உமது பெயர் ஊற்றுண்ட வாசனைத் தைலம்போல் இருக்கிறது. கன்னியர் உம்மைக் காதலிப்பதில் ஆச்சரியம் இல்லையே! 4 என்னை உம்முடன் கூட்டிச்செல்லும்; நாம் விரைவாய் போய்விடுவோம். அரசன் தமது அறைக்குள் என்னைக் கொண்டுவரட்டும். தோழியர் நாங்கள் உம்மில் மகிழ்ந்து களிப்படைகிறோம்; திராட்சை இரசத்தைப் பார்க்கிலும் உமது அன்பையே புகழ்வோம். காதலி அவர்கள் உம்மீது காதல்கொள்வது எவ்வளவு சரியானது! 5 எருசலேமின் மங்கையரே, நான் கேதாரின் கூடாரங்களைப் போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் கருப்பாய் இருந்தாலும் அழகாகவே இருக்கிறேன். 6 நான் கருப்பாய் இருக்கிறேன் என்று பார்க்கவேண்டாம்; வெயில் பட்டதினாலே நான் கருப்பாய் இருக்கிறேன். என் சகோதரர்கள் என்மேல் கோபங்கொண்டு, திராட்சைத் தோட்டங்களைப் பராமரிக்க என்னை வைத்தார்கள்; அதினால் என் சொந்தத் திராட்சைத் தோட்டத்தை என்னால் கவனிக்க முடியாமல் போய்விட்டது. 7 என் காதலரே, உமது மந்தைகளை எங்கே மேய்க்கிறீர்? மத்தியான வேளையிலே உமது செம்மறியாடுகளை எங்கே இளைப்பாறப் பண்ணுகிறீர்? அதை எனக்குச் சொல்லும். முகத்திரையிட்ட பெண்போல், ஏன் நான் உமது தோழர்களின் மந்தைகளுக்கிடையில் இருக்கவேண்டும்? 8 பெண்களுள் பேரழகியே, அதை நீ அறியாவிட்டால், செம்மறியாட்டின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து போய், மேய்ப்பர்களின் கூடாரங்களுக்கு அருகில் உன் வெள்ளாட்டுக் குட்டிகளை மேயவிடு. 9 என் அன்பே, நான் உன்னைப் பார்வோனின் தேர்களில் பூட்டப்பட்ட பெண் குதிரைக்கு ஒப்பிடுகிறேன். 10 காதணிகள் தொங்கும் உன் கன்னங்களும், நகைகள் அணிந்த உன் கழுத்தும் அழகானவை. 11 நாங்கள் உனக்கு வெள்ளிப் பதிக்கப்பட்ட தங்கக் காதணிகளைச் செய்வோம். 12 அரசர் தமது பந்தியில் இருக்கையிலே எனது வாசனைத் தைலம் நறுமணம் வீசியது. 13 என் காதலர் எனக்கு என் மார்பகங்களுக்கிடையில் இருக்கும் வெள்ளைப்போள முடிச்சாய் இருக்கிறார். 14 என் காதலர் எனக்கு என்கேதி ஊர் திராட்சைத் தோட்டங்களில் உள்ள, மருதாணி பூங்கொத்து போன்றவர். 15 என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்! ஆ, நீ எவ்வளவு அழகானவள்! உன் கண்கள் புறாக்கண்கள். 16 என் காதலரே, நீர் எவ்வளவு அழகானவர்! ஆ, எவ்வளவு கவர்ச்சி! நமது படுக்கை பசுமையானது. 17 நம் வீட்டின் விட்டங்கள் கேதுரு மரத்தாலானவை, நம்முடைய மச்சு தேவதாரு மரத்தாலானவை.

< உன்னதப்பாட்டு 1 >