< சங்கீதம் 95 >

1 வாருங்கள், யெகோவாவை மகிழ்ச்சியோடு பாடுவோம்; நம்முடைய இரட்சிப்பின் கன்மலையை சத்தமிட்டுத் துதிப்போம். 2 நன்றியுடன் அவர்முன் வருவோம்; இசையினாலும் பாட்டினாலும் அவரைப் புகழ்ந்து உயர்த்துவோம். 3 யெகோவாவே மகா இறைவனாய் இருக்கிறார்; எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான மகா அரசருமாய் இருக்கிறார். 4 பூமியின் ஆழங்கள் அவருடைய கரத்தில் இருக்கின்றன; மலை உச்சிகளும் அவருக்கே உரியவை. 5 கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வறண்ட நிலத்தையும் அவருடைய கரங்களே உருவாக்கின. 6 வாருங்கள், நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக நாம் குனிந்து, பணிந்து, வழிபடுவோம்; நாம் முழங்காலிடுவோம். 7 அவரே நம் இறைவன்; நாம் அவருடைய மேய்ச்சலின் மக்களும் அவருடைய பராமரிப்புக்குள்ளான மந்தையுமாய் இருக்கிறோம். இன்று நீங்கள் அவருடைய குரலைக் கேட்பீர்களானால், 8 “அன்று மேரிபாவில் விவாதம் செய்தது போலவும், பாலைவனத்திலே மாசாவில் சோதனை செய்தது போலவும், உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம். 9 அங்கே உங்கள் முன்னோர்கள் என்னைச் சோதித்தார்கள்; நான் செய்தவைகளைக் கண்டிருந்தும் என்னைப் பரீட்சை பார்த்தார்கள். 10 நான் நாற்பது வருடங்களாக அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன்; ‘அவர்கள் என்னைவிட்டு விலகிப்போகும் இருதயமுள்ள மக்கள் என்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’ என்றும் நான் சொன்னேன். 11 எனவே கோபங்கொண்டு, ‘அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதில்லை’ என்று, ஆணையிட்டு அறிவித்தேன்.”

< சங்கீதம் 95 >