< சங்கீதம் 92 >

1 ஓய்வுநாளுக்கான பாடலாகிய சங்கீதம். யெகோவாவைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவதும் நல்லது. 2 காலையிலே உமது அன்பையும் இரவிலே உமது உண்மையையும் அறிவிப்பது நல்லது. 3 பத்து நரம்பு வீணையின் இசையினாலும், யாழின் ஓசையினாலும் அதை அறிவிப்பது நல்லது. 4 யெகோவாவே, நீர் உமது செயல்களினால் என்னை மகிழ்ச்சியாக்குகிறீர்; உமது கைகளின் வேலைகளினிமித்தம் நான் மகிழ்ந்து பாடுகிறேன். 5 யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு பெரிதானவை, உம்முடைய யோசனைகள் எவ்வளவு ஆழமானவை! 6 உணர்வற்ற மனிதன் அறியாததும், மூடர் விளங்கிக்கொள்ளாததும் இதுவே, 7 கொடியவர்கள் புல்லைப்போல் முளைத்தாலும், தீங்கு செய்கிறவர்கள் எல்லோரும் செழித்தாலும், என்றென்றைக்கும் அழிந்துபோவார்கள். 8 ஆனாலும் யெகோவாவே, நீர் என்றென்றுமாய் புகழ்ந்து உயர்த்தப்படுகிறீர். 9 யெகோவாவே, உமது பகைவர், நிச்சயமாகவே உம்முடைய பகைவர் அழிந்தேபோவார்கள்; தீமை செய்வோர் எல்லோருமே சிதறடிக்கப்படுவார்கள். 10 காட்டெருதின் பெலத்தைப்போல் நீர் என் பெலத்தை உயர்த்துவீர்; சிறந்த எண்ணெய் என்மேல் ஊற்றப்பட்டன. 11 என் விரோதிகளின் தோல்வியைக் கண்ணாரக் கண்டேன்; என் செவிகள் என் கொடிய எதிரிகள் முறியடிக்கப்படுவதைக் காதாரக் கேட்டேன். 12 நீதிமான்கள் பனைமரத்தைப்போல் செழிப்பார்கள், அவர்கள் லெபனோனின் கேதுரு மரம்போல் வளர்வார்கள்; 13 அவர்கள் யெகோவாவினுடைய வீட்டிலே நாட்டப்பட்டு, நமது இறைவனுடைய ஆலய முற்றங்களில் செழிப்பார்கள். 14 அவர்கள் செழுமையும் பசுமையுமாயிருந்து, தங்கள் முதிர்வயதிலும் கனி கொடுப்பார்கள். 15 “யெகோவா நீதியுள்ளவர்; அவரே என் கன்மலை; அவரிடத்தில் அநீதி இல்லை” என்று அவர்கள் பிரசித்தப்படுத்துவார்கள்.

< சங்கீதம் 92 >