< சங்கீதம் 61 >

1 கம்பியிசைக் கருவிகளுடன் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். என் இறைவனே, என் கதறுதலைக் கேளும், என் மன்றாட்டுக்குச் செவிகொடும். 2 பூமியின் கடைசிகளில் இருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; என் இருதயம் சோர்ந்து போகையில் உம்மைக் கூப்பிடுகிறேன்; என்னைப் பார்க்கிலும் உயரமான கற்பாறையினிடத்திற்கு என்னை வழிநடத்தும். 3 நீரே என் புகலிடமாய் இருக்கிறீர்; பகைவருக்கு எதிரான பலமுள்ள கோபுரமாய் இருக்கிறீர். 4 நான் என்றென்றும் உமது கூடாரத்தில் குடியிருப்பேன்; உமது சிறகுகளின் அடைக்கலத்தில் தஞ்சமடைவேன். 5 இறைவனே, நீர் என் நேர்த்திக்கடன்களைக் கேட்டிருக்கிறீர்; உமது பெயருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குரிய உரிமைச்சொத்தை நீர் எனக்குத் தந்திருக்கிறீர். 6 அரசனின் வாழ்நாட்களை அதிகமாக்கும்; அவனுடைய வருடங்களை தலைமுறை தலைமுறைகளாக அதிகமாக்கும். 7 இறைவனின் சமுகத்தில் அவன் என்றைக்கும் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பானாக; அவனைப் பாதுகாப்பதற்காக உமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் நியமித்தருளும். 8 அப்பொழுது நான் என்றென்றைக்கும் உமது பெயருக்குத் துதி பாடுவேன்; நாள்தோறும் எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.

< சங்கீதம் 61 >