< சங்கீதம் 54 >

1 தாவீது தங்களிடம் ஒளிந்திருக்கிறான் என்று சீப்பூரார் சவுலுக்கு சொன்னபோது, கம்பியிசைக் கருவிகளுடன் தாவீது பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் சங்கீதம். இறைவனே, உமது பெயரால் என்னைக் காப்பாற்றும், உமது வல்லமையால் எனக்கு நியாயம் செய்யும். 2 இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்; என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும். 3 தற்பெருமையுள்ளவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்; இறைவனை மதியாத, ஈவு இரக்கமற்ற மனிதர் என் உயிரை வாங்கத் தேடுகிறார்கள். 4 நிச்சயமாக இறைவனே எனக்கு உதவுபவர்; யெகோவாவே என்னை ஆதரிக்கிறவர். 5 எனக்குத் தீமை செய்கிறவர்கள் மேலேயே அவர்களுடைய தீமை திரும்பட்டும்; உமது உண்மையின் நிமித்தம் அவர்களை தண்டித்துவிடும். 6 நான் உமக்கு சுயவிருப்பக் காணிக்கையைப் பலியிடுவேன்; யெகோவாவே, நான் உமது பெயரைத் துதிப்பேன், ஏனெனில் அது நல்லது. 7 நீர் என்னை என்னுடைய எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்தீர்; என் கண்கள் என் எதிரிகளின் வீழ்ச்சியைப் பார்த்தன.

< சங்கீதம் 54 >