< சங்கீதம் 53 >

1 மகலாத் என்னும் பாணியில் வாசிக்கப்படும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம். மூடன் தன் இருதயத்தில், “இறைவன் இல்லை” என்று சொல்கிறான். அவர்கள் சீர்கெட்டவர்கள்; அவர்களுடைய வழிகள் இழிவானவை; அவர்களில் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை. 2 இறைவன் பரலோகத்திலிருந்து மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், அவர்களில் விவேகமுள்ளவனாவது இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார். 3 எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை. 4 தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்; அவர்கள் இறைவனை வழிபடுவதுமில்லை. 5 பயப்படுவதற்கு எதுவுமில்லாத இடத்திலே, அவர்கள் பயத்தில் நடுங்குகிறார்கள். உன்னைத் தாக்கியவர்களின் எலும்புகளை இறைவன் சிதறடித்தார்; இறைவன் அவர்களைப் புறக்கணித்தபடியால், நீ அவர்களை வெட்கப்படுத்தினாய். 6 சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக! இறைவன் தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்!

< சங்கீதம் 53 >