< சங்கீதம் 50 >

1 ஆசாபின் சங்கீதம். வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவா பேசுகிறார், அவர் சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து, அது மறையும் இடம் வரையுமுள்ள முழு உலகத்தையும் அழைக்கிறார். 2 பூரண அழகுள்ள சீயோனிலிருந்து இறைவன் பிரகாசிக்கிறார். 3 நம்முடைய இறைவன் வருகிறார், அவர் மவுனமாய் இருக்கமாட்டார்; அவருக்கு முன்னாக நெருப்பு சுட்டெரித்துச் செல்கிறது; அவரைச் சுற்றிப் புயல் சீற்றத்துடன் வீசுகிறது. 4 அவர் தமது மக்களை நியாயந்தீர்க்கும்படியாக, மேலேயுள்ள வானங்களையும் பூமியையும் அழைத்துச் சொல்கிறார்: 5 “பலியினால் என்னுடன் உடன்படிக்கை செய்த, பரிசுத்தவான்களை ஒன்றுகூட்டுங்கள்.” 6 வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கின்றன; அவர் நியாதிபதியாகிய இறைவன். 7 “என் மக்களே, கேளுங்கள், நான் பேசுவேன்; இஸ்ரயேலே, நான் உனக்கு விரோதமாகச் சாட்சி கூறுவேன்: நான் இறைவன், நானே உங்கள் இறைவன். 8 எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கும் உங்கள் பலிகளுக்காகவோ, அல்லது உங்கள் தகன காணிக்கைகளுக்காகவோ நான் உங்களைக் கண்டிக்கவில்லை. 9 உங்கள் வீட்டிலிலுள்ள காளைகளோ, உங்கள் தொழுவத்திலுள்ள வெள்ளாடுகளோ எனக்கு வேண்டியதில்லை. 10 ஏனெனில் காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் ஆயிரக்கணக்கான குன்றுகளிலுள்ள ஆடுமாடுகளும் என்னுடையவைகள். 11 மலைகளிலுள்ள ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்; வயல்வெளிகளிலுள்ள உயிரினங்களும் என்னுடையவைகள். 12 நான் பசியாயிருந்தால் உங்களிடம் சொல்லமாட்டேன்; ஏனெனில் உலகமும் அதிலுள்ள யாவும் என்னுடையவைகள். 13 நான் காளைகளின் இறைச்சியை உண்டு, ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தைக் குடிப்பேனோ? 14 “நீங்கள் இறைவனாகிய எனக்கு உங்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிடுங்கள்; மகா உன்னதமான இறைவனாகிய எனக்கு உங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுங்கள். 15 துன்ப நாளில் என்னை நோக்கி மன்றாடிக் கூப்பிடுங்கள், நான் உங்களை விடுவிப்பேன்; நீங்கள் என்னை மகிமைப்படுத்துவீர்கள்.” 16 கொடியவர்களுக்கு இறைவன் சொல்கிறதாவது: “என் சட்டங்களைக் கூறுவதற்கும், என் உடன்படிக்கையை உங்கள் உதடுகளினால் உச்சரிப்பதற்கும் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? 17 என்னுடைய அறிவுறுத்தலை வெறுத்து, என் வார்த்தைகளை உங்களுக்குப் பின்னாக எறிந்துவிடுகிறீர்கள். 18 நீங்கள் திருடனைக் காணும்போது அவனோடு சேர்ந்துகொள்கிறீர்கள்; விபசாரக்காரருடனும் நீங்கள் பங்குகொள்கிறீர்கள். 19 நீங்கள் உங்கள் வாயைத் தீமைக்காக பயன்படுத்துகிறீர்கள்; உங்கள் நாவை வஞ்சகத்தைப் பேசப் பயன்படுத்துகிறீர்கள். 20 நீங்கள் உங்கள் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசுகிறீர்கள்; இடைவிடாமல் உங்கள் சகோதரனையே தூற்றுகிறீர்கள். 21 இவற்றை நீங்கள் செய்தபோது நான் மவுனமாய் இருந்தேன்; நானும் உங்களைப்போலவே இருப்பேன் என்று நினைத்தீர்கள். ஆனால் நான் உங்களைக் கடிந்துகொண்டு, உங்கள் கண்களுக்கு முன்பாகவே உங்களைக் குற்றஞ்சாட்டுவேன். 22 “இறைவனை மறக்கிறவர்களே, இதைக் கவனியுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களை முற்றிலும் தண்டித்துப் போடுவேன்; ஒருவரும் உங்களைத் தப்புவிக்கமாட்டார்கள். 23 நன்றி பலியைச் செலுத்துகிறவன் என்னைக் கனம்பண்ணுகிறான்; இறைவனாகிய என் இரட்சிப்பை நான் குற்றமற்றவனுக்குக் காண்பிப்பேன்.”

< சங்கீதம் 50 >