< சங்கீதம் 21 >

1 பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, அரசன் உமது பெலத்தில் களிகூருகிறார். நீர் கொடுக்கும் வெற்றிகளில் அவருடைய மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாயிருக்கிறது. 2 அவருடைய இருதயத்தின் வாஞ்சையை நீர் அவருக்குக் கொடுத்திருக்கிறீர்; அவருடைய உதடுகளின் வேண்டுதலை நீர் புறக்கணிக்கவில்லை. 3 நிறைவான ஆசீர்வாதங்களுடன் நீர் அவரை வரவேற்று, சுத்தத் தங்கத்தினாலான மகுடத்தை நீர் அவர் தலையின்மேல் வைத்தீர். 4 அவர் உம்மிடம் ஆயுளைக் கேட்டார், அதை நீர் அவருக்குக் கொடுத்தீர்; அவர் என்றென்றும் வாழ, நீடித்த ஆயுளைக் கொடுத்தீர். 5 நீர் கொடுத்த வெற்றிகளின் மூலம் அவருடைய மகிமை பெரியதாயிருக்கிறது; நீர் அவரை மகிமையாலும் மகத்துவத்தாலும் நிரப்பியிருக்கிறீர். 6 நிச்சயமாகவே நீர் அவருக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறீர்; உமது சமுகத்தின் ஆனந்தத்தால், அவரை மகிழ்ச்சியாக்கினீர். 7 ஏனெனில் அரசன் யெகோவாவிலேயே நம்பிக்கை வைக்கிறார்; உன்னதமானவரின் உடன்படிக்கையின் அன்பினிமித்தம் அவர் அசைக்கப்படமாட்டார். 8 உமது கரம் உம்முடைய பகைவர் எல்லோரையும் பிடிக்கும்; உமது வலதுகரம் உம்முடைய எதிரிகளைப் பிடித்துக்கொள்ளும். 9 நீர் வரும் நேரத்தில் அவர்களை ஒரு நெருப்புச் சூளையைப்போல் ஆக்கிவிடுவீர். யெகோவா தமது கடுங்கோபத்தில் அவர்களை அழித்துவிடுவார்; அவருடைய நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். 10 நீர் அவர்களுடைய சந்ததிகளைப் பூமியிலிருந்து அழிப்பீர், அவர்களுடைய சந்ததிகளை மனுக்குலத்திலிருந்து அழிப்பீர். 11 உமது பகைவர் உமக்கு எதிராக தீமையான சதி செய்தார்கள், பொல்லாத சதித்திட்டங்களை வகுத்தார்கள்; ஆனாலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது. 12 நீர் வில்லை நாணேற்றி அவர்களை குறிபார்த்து எய்யும்போது, அவர்களை புறமுதுகு காட்டப்பண்ணுவீர். 13 யெகோவாவே, உமது பெலத்தில் நீர் உயர்த்தப்பட்டிருப்பீராக; நாங்கள் உமது வல்லமையைப் பாடித் துதிப்போம்.

< சங்கீதம் 21 >