< சங்கீதம் 143 >

1 தாவீதின் சங்கீதம். யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும், இரக்கத்திற்கான என் கதறுதலுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் நீதியின்படியும் எனக்கு பதில் தாரும். 2 உமது அடியானை நியாயந்தீர்க்காதேயும். வாழ்கின்ற ஒருவருமே உமக்கு முன்பாக நீதிமான்கள் இல்லையே. 3 பகைவன் என்னைப் பின்தொடர்கிறான், அவன் என்னை தரையில் போட்டு தாக்குகிறான்; வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்களைப்போல், அவன் என்னை இருளில் குடியிருக்கப்பண்ணுகிறான். 4 ஆகவே எல்லா நம்பிக்கையையும் இழந்து என் ஆவி எனக்குள் சோர்ந்துபோகிறது; பயத்தால் என் இருதயம் கலங்குகிறது. 5 நான் முந்தின நாட்களை நினைக்கிறேன்; உமது செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன். 6 நான் உம்மை நோக்கி என் கைகளை விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகம் கொண்டிருக்கிறது. 7 யெகோவாவே, சீக்கிரமாய் எனக்குப் பதில் தாரும்; என் உள்ளம் சோர்ந்துபோகிறது; உமது முகத்தை என்னிடமிருந்து மறையாதேயும்; இல்லாவிட்டால், நான் மரணக் குழியில் இறங்குகிறவர்களைப் போலாகிவிடுவேன். 8 காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும், ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மிலேயே வைத்திருக்கிறேன்; நான் போகவேண்டிய வழியை எனக்குக் காண்பியும், ஏனெனில் என் உயிரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன். 9 யெகோவாவே, என் பகைவரிடமிருந்து என்னைத் தப்புவியும்; ஏனெனில் நான் உமக்குள் என்னை மறைத்துக்கொள்கிறேன். 10 நீரே என் இறைவன்; ஆதலால் உமது சித்தத்தைச் செய்ய எனக்குப் போதியும்; உமது நல்ல ஆவியானவர் என்னை நல்வழியில் நடத்துவாராக. 11 யெகோவாவே, உமது பெயரின் மகிமைக்காக என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; உமது நியாயத்தினிமித்தம் வேதனையிலிருந்து என்னை விடுவியும். 12 உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என் பகைவரை அழித்துவிடும்; என் எதிரிகள் அனைவரையும் ஒழித்துவிடும்; ஏனெனில் நான் உமது அடியவன்.

< சங்கீதம் 143 >