< சங்கீதம் 137 >

1 பாபிலோனின் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, சீயோனை நினைத்தபோது அழுதோம். 2 அங்கே இருந்த ஆற்றலறிச் செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தொங்கவிட்டோம். 3 ஏனெனில் எங்களைச் சிறைப்பிடித்தவர்கள், அங்கே எங்களைப் பாடும்படி கேட்டார்கள்; எங்களைச் சித்திரவதை செய்தவர்கள் மகிழ்ச்சிப் பாடல்களைப் பாடும்படி வற்புறுத்தி, “சீயோனின் பாடல்களுள் ஒன்றை எங்களுக்காகப் பாடுங்கள்” என்று சொன்னார்கள். 4 வேறுநாட்டு மண்ணில் இருக்கையில் யெகோவாவின் பாடல்களை எங்களால் எப்படிப் பாடமுடியும்? 5 எருசலேமே! நான் உன்னை மறந்தால், என் வலதுகை அதின் திறமையை மறப்பதாக. 6 நான் உன்னை நினையாவிட்டால், எருசலேமை எனது மேலான மகிழ்ச்சியாகக் நான் கருதாவிட்டால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக. 7 யெகோவாவே! எருசலேம் கைப்பற்றபட்ட நாளிலே ஏதோமியர் செய்தவற்றை நினைவுகூரும்; “அதை இடித்துப்போடுங்கள், அதின் அஸ்திபாரங்கள்வரை அதை இடித்துப்போடுங்கள்!” என்று சொன்னார்களே. 8 பாபிலோன் மகளே, அழிவுக்கு ஒப்படைக்கப்பட்டவளே, நீ எங்களுக்குச் செய்தவற்றுக்காக உனக்குப் பதில் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். 9 உன் குழந்தைகளைப் பிடித்து, அவர்களைப் பாறைகளின்மேல் மோதியடிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

< சங்கீதம் 137 >