< யோவான் 17 >

1 இயேசு இதைச் சொன்னபின்பு அவர் பரலோகத்தை நோக்கிப்பார்த்து மன்றாடினார், “பிதாவே, எனது வேளை வந்துவிட்டது. உமது மகனாகிய நான் உம்மை மகிமைப்படுத்தும்படி, நீர் உம்முடைய மகனாகிய என்னை மகிமைப்படுத்தும். 2 நீர் எல்லா மக்கள்மேலும் அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறீர். அவரிடம் நீர் ஒப்புக்கொடுத்த அனைவருக்கும் அவர் நித்திய ஜீவனைக் கொடுக்கும்படியே நீர் அதிகாரம் கொடுத்தீர். (aiōnios g166) 3 ஒன்றான சத்திய இறைவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசுகிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொள்வதே நித்தியவாழ்வு. (aiōnios g166) 4 நீர் செய்யும்படி எனக்குக் கொடுத்த வேலையை நிறைவேற்றி முடித்ததன் மூலம், பூமியிலே உம்மை மகிமைப்படுத்தினேன். 5 பிதாவே, உலகம் உண்டாகும் முன்பே எனக்கு உம்மிடம் இருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மில் மகிமைப்படுத்தும். 6 “உலகத்திலிருந்து நீர் எனக்கு ஒப்புக்கொடுத்த இவர்களுக்கு உம்முடைய பெயரை வெளிப்படுத்தினேன். உம்முடையவர்களாய் இருந்த இவர்களை நீர் எனக்குக் கொடுத்தீர். இவர்களும் நீர் கொடுத்த வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள். 7 நீர் எனக்குத் தந்த எல்லாம் உம்மிடத்திலிருந்தே வருகிறது என்று இவர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள். 8 ஏனெனில் நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளையே நான் இவர்களுக்குக் கொடுத்தேன். இவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். நான் உம்மிடத்திலிருந்து வந்தேன் என்று இவர்கள் நிச்சயமாய் அறிந்திருக்கிறார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்று இவர்கள் விசுவாசிக்கின்றார்கள். 9 நான் இவர்களுக்காகவே மன்றாடுகிறேன். நான் உலகத்துக்காக மன்றாடவில்லை. நீர் எனக்குக் கொடுத்திருக்கும் இவர்களுக்காகவே மன்றாடுகிறேன். ஏனெனில் இவர்கள் உம்முடையவர்கள். 10 என்னுடையதெல்லாம் உம்முடையதே, உம்முடையதெல்லாம் என்னுடையதே. இவர்கள் மூலமாய் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். 11 நான் இனிமேலும் உலகத்தில் இருக்கமாட்டேன். நான் உம்மிடத்தில் வருகிறேன்; இவர்களோ இன்னும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். ஆகவே பரிசுத்த பிதாவே, உம்முடைய பெயரின் வல்லமையினாலே இவர்களைக் காத்துக்கொள்ளும். அந்தப் பெயரையே நீர் எனக்கும் கொடுத்தீர். எனவே நாம் ஒன்றாய் இருப்பதுபோலவே, இவர்களும் ஒன்றாய் இருக்கட்டும். 12 நான் இவர்களோடு இருந்தபோது, நீர் எனக்குக் கொடுத்த உமது பெயராலே இவர்களைக் காப்பாற்றிப் பாதுகாத்து வைத்திருந்தேன். வேதவசனம் நிறைவேறும்படி அழிவின் மகனைத் தவிர வேறு ஒருவரையும் நான் இழந்து போகவில்லை. 13 “நான் இப்போது உம்மிடத்தில் வருகிறேன். ஆனால் இவர்கள் என்னுடைய சந்தோஷத்தைத் தங்களுக்குள் முழுநிறைவாய்ப் பெற்றுக்கொள்ளும்படி, நான் உலகத்தில் இருக்கும்போதே இவைகளைச் சொல்கிறேன். 14 நான் இவர்களுக்கு உம்முடைய வார்த்தையைக் கொடுத்திருக்கிறேன். உலகமோ இவர்களை வெறுத்திருக்கிறது. ஏனெனில் நான் உலகத்திற்கு உரியவனாய் இராததுபோல, இவர்களும் உலகத்திற்கு உரியவர்கள் அல்ல. 15 இந்த உலகத்தை விட்டு இவர்களை எடுத்துக்கொள்ளும் என்று நான் மன்றாடவில்லை; ஆனால் தீயவனிடமிருந்து இவர்களைப் பாதுகாத்துக்கொள்ளும் என்றே மன்றாடுகிறேன். 16 நான் உலகத்திற்கு உரியவனாய் இல்லாததுபோல் இவர்களும் உலகத்துக்கு உரியவர்கள் அல்ல. 17 சத்தியத்தினாலே இவர்களை அர்ப்பணியும்; உம்முடைய வார்த்தையே சத்தியம். 18 நீர் என்னை உலகத்திற்குள் அனுப்பினதுபோல நானும் இவர்களை உலகத்திற்குள் அனுப்புகிறேன். 19 இவர்கள் தங்களை உண்மையாக அர்ப்பணிக்கும்படி, இவர்களுக்காக நானும் என்னை அர்ப்பணிக்கிறேன். 20 “நான் என் சீடர்களுக்காக மாத்திரம் மன்றாடவில்லை. இவர்கள் அறிவிக்கும் செய்தியின் மூலமாய் என்னில் விசுவாசம் வைக்கப் போகிறவர்களுக்காகவும் மன்றாடுகிறேன். 21 பிதாவே நீர் என்னில் இருக்கிறது போலவும், நான் உம்மில் இருக்கிறது போலவும் அவர்கள் எல்லோரும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்றும் மன்றாடுகிறேன். நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்படி, அவர்களும் நம்மில் ஒன்றாய் இருக்கட்டும். 22 நாம் ஒன்றாய் இருப்பதுபோலவே அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். 23 இவ்வாறு நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருப்பதனால், அவர்களும் முழுமையான ஒற்றுமைக்குள் கொண்டுவரப்படுவார்கள். அப்பொழுது நீரே என்னை அனுப்பினீர் என்றும், நீர் என்னில் அன்பாயிருந்தது போலவே, அவர்களிலும் அன்பாயிருக்கிறீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும். 24 “பிதாவே நீர் எனக்குக் கொடுத்த இவர்கள் நான் இருக்கும் இடத்திலே, என்னுடன் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். உலகம் படைக்கப்படும் முன்னே நீர் என்னில் அன்பாயிருந்ததினால், நீர் எனக்குக் கொடுத்த மகிமையை இவர்கள் காணவேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். 25 “நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியாவிட்டாலும், நான் உம்மை அறிவேன். நான் உம்மாலேயே அனுப்பப்பட்டேன் என்று இவர்களும் அறிந்திருக்கிறார்கள். 26 நீர் என்மேல் வைத்திருக்கும் அன்பு இவர்கள்மேல் இருக்கும்படிக்கும், நான் இவர்களில் இருக்கும்படிக்கும் நான் உமது பெயரை இவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறேன். தொடர்ந்து உம்மைத் தெரியப்படுத்துவேன்” என்றார்.

< யோவான் 17 >