< எரேமியா 47 >

1 பார்வோன், காசாவைத் தாக்குவதற்கு முன் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினன் எரேமியாவுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே: 2 யெகோவா கூறுவது இதுவே: “பாருங்கள், வடக்கிலே வெள்ளம் எவ்வளவாய் பொங்கி எழுகிறது. அது கரைபுரண்டோடும் வெள்ளமாகும். அது நாட்டின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும் புரண்டோடும். பட்டணங்கள்மேலும், அதில் வாழும் யாவர்மேலும் புரண்டோடும். மக்கள் அலறி அழுவார்கள். நாட்டில் குடியிருப்போர் எல்லோரும் புலம்புவார்கள். 3 பாய்ந்தோடும் குதிரைகளின் குளம்புகளின் ஒலியையும், பகைவர்களின் தேர்களின் சத்தத்தையும், தேர்ச்சக்கரங்களின் இரைச்சலையும் கேட்டு ஓலமிடுவார்கள். தந்தையர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவிசெய்யும்படி திரும்பமாட்டார்கள். அவர்களுடைய கைகள் சோர்ந்துபோகும். 4 ஏனெனில் பெலிஸ்தியர் அனைவரையும் அழிக்கும் நாள் வந்திருக்கிறது. தீருவுக்கும் சீதோனுக்கும் உதவிசெய்யக்கூடிய, இன்னும் தப்பியிருப்பவர்களை அழிப்பதற்கான நாள் வந்திருக்கிறது. கப்தோரின் கரையோரத்தில் மீதியாயிருக்கும் பெலிஸ்தியரை யெகோவா அழிக்கப்போகிறார். 5 காசா துக்கங்கொண்டாடுதலுக்காக தன் தலையை மொட்டையடிக்கும். அஸ்கலோன் மவுனமாய் இருக்கும். சமவெளியில் மீதியாயிருப்பவர்களே, எவ்வளவு காலத்திற்கு உங்களை நீங்களே வெட்டிக்கொள்வீர்கள்? 6 “‘ஐயோ! யெகோவாவின் வாளே! நீ ஓய்வதற்கு எவ்வளவு காலம் செல்லும்? உறைக்குத் திரும்பி அங்கு ஓய்ந்திரு என்று நீங்கள் கதறுகிறீர்களே!’ 7 ஆனால் அஸ்கலோனையும், கரையோரப் பகுதிகளையும் தாக்கும்படி, யெகோவா கட்டளையிட்டு உத்தரவு கொடுத்திருக்க அது எப்படி ஓய்ந்திருக்கும்?”

< எரேமியா 47 >