< ஏசாயா 13 >

1 ஆமோஸின் மகன் ஏசாயா பாபிலோனைப்பற்றிக் கண்ட தரிசனத்தில் கூறப்பட்ட இறைவாக்கு:
ஆமோத்சின் மகனாகிய ஏசாயா பாபிலோனைக்குறித்து தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட செய்தி.
2 வறண்ட மலையுச்சியில் கொடியேற்றுங்கள், போர்வீரர்களை கூப்பிடுங்கள்; உயர்குடி மக்களின் வாசல்களுக்குள் போகும்படி அவர்களை அழையுங்கள்.
உயர்ந்த மலையின்மேல் கொடியேற்றுங்கள்; உரத்த சத்தமிட்டு மக்களை வரவழையுங்கள்; அவர்கள் பிரபுக்களின் வாசல்களுக்குள் நுழைவதற்குச் சைகை காட்டுங்கள்.
3 எனது பரிசுத்தவான்களுக்கு கட்டளையிட்டிருக்கிறேன்; எனது கோபத்தை நிறைவேற்ற என் போர்வீரர்களை அழைத்திருக்கிறேன்; அவர்கள் என் வெற்றியில் களிகூறுகிறவர்கள்.
நான் பரிசுத்தமாக்கினவர்களுக்குக் கட்டளை கொடுத்தேன்; என் கோபத்தை நிறைவேற்ற என் பராக்கிரமசாலிகளை அழைத்தும் இருக்கிறேன்; அவர்கள் என் மகத்துவத்தினாலே களிகூருகிறவர்கள் என்கிறார்.
4 கேளுங்கள், மலைகளின்மேல் ஒரு சத்தம் கேட்கிறது! அது பெருந்திரளான மக்களின் இரைச்சல் போலிருக்கிறது. கேளுங்கள், ராஜ்யங்களின் மத்தியில் பெருமுழக்கம் கேட்கிறது! அது பல நாடுகள் ஒன்றுசேர்வது போன்ற ஆரவாரமாயிருக்கிறது. சேனைகளின் யெகோவா போருக்கு ஒரு படையைத் திரட்டுகிறார்.
திரளான மக்களின் சத்தத்தைப்போன்ற கூட்டத்தின் இரைச்சலும், கூட்டப்பட்ட மக்களுடைய தேசங்களின் அமளியான இரைச்சலும் மலைகளில் கேட்கப்படுகிறது; சேனைகளின் யெகோவா போர்ப் படையை எண்ணிக்கை பார்க்கிறார்.
5 தூர நாடுகளிலிருந்து அவர்கள் வருகிறார்கள்; தொடுவானங்களின் எல்லைகளிலிருந்து வருகிறார்கள். முழு நாட்டையும் அழித்தொழிக்க யெகோவா தமது கோபத்தின் ஆயுதங்களுடன் வருகிறார்.
யெகோவா வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது.
6 அழுது புலம்புங்கள், யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் நாள் சமீபமாகிவிட்டது; அந்த நாள் எல்லாம் வல்லவரிடமிருந்து பேரழிவைப்போல் வரும்.
அலறுங்கள், யெகோவாவின் நியாயத்தீர்ப்பின்நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா அழிவாக வரும்.
7 இதனால் கைகளெல்லாம் தளர்ந்து போகும்; எல்லா மனிதரின் இருதயமும் உருகிப்போகும்.
ஆதலால் எல்லாக் கைகளும் தளர்ந்து, எல்லா மனிதரின் இருதயமும் கரைந்துபோகும்.
8 அவர்களைத் திகில் பற்றிக்கொள்ளும், வலியும் வேதனையும் அவர்களைப் பிடித்துக்கொள்ளும்; பிரசவ வேதனைப்படும் பெண்ணைப்போல் அவர்கள் துடிப்பார்கள். அவர்கள் வெட்கத்தினால் முகம் சிவக்க ஒருவரையொருவர் வியப்புடன் பார்ப்பார்கள்.
அவர்கள் பயமடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப்பிடிக்கும்; பிள்ளை பெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் திகைத்துப்பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும்.
9 பாருங்கள், யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் நாள் வருகிறது; அது கொடுமையின் நாள், நாட்டைப் பாழாக்குவதற்கும், அங்குள்ள பாவிகளை தண்டிப்பதற்கும், கோபத்துடனும் கடுங்கோபத்துடனும் அது வருகிறது.
இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் யெகோவாவுடைய நாள் கடுமையும், மூர்க்கமும், மிகுந்த கோபமுமாக வருகிறது.
10 வானத்து நட்சத்திரங்களும், நட்சத்திரக் கூட்டங்களும் தங்கள் ஒளியைக் கொடாதிருக்கும். சூரியன் உதிக்கும்போது இருண்டுபோகும்; சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும்.
௧0வானத்தின் நட்சத்திரங்களும் விண்மீன்களும் ஒளி கொடாமலிருக்கும்; சூரியன் உதிக்கும்போது இருண்டுபோகும்; சந்திரன் ஒளி கொடாமலிருக்கும்.
11 நான் உலகத்தை அதன் தீமைக்காகவும், கொடியவரை அவர்களுடைய பாவங்களுக்காகவும் தண்டிப்பேன். துன்மார்க்கரின் அகந்தைக்கும் நான் முடிவு செய்வேன்; இரக்கமற்றவர்களின் பெருமையைத் தாழ்த்துவேன்.
௧௧பாவத்தின் காரணமாக உலகத்தையும், அக்கிரமத்தின் காரணமாக துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியச்செய்து, கொடியரின் கொடுமையைத் தாழ்த்துவேன்.
12 சிறந்த தங்கத்தைப் பார்க்கிலும், ஓப்பீர் நாட்டின் தங்கத்தைப் பார்க்கிலும் நான் மனிதரை அபூர்வமாக்குவேன்.
௧௨மக்களைப் பசும்பொன்னிலும், மனிதனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூர்வமாக்குவேன்.
13 ஆகையால் நான் வானங்களை நடுங்கப்பண்ணுவேன்; பூமி தன் நிலையிலிருந்து அசையும். எல்லாம் வல்ல யெகோவாவின் கோபம் பற்றியெரியும் நாளில், அவருடைய கோபத்தில் இது நடக்கும்.
௧௩இதனால் சேனைகளின் யெகோவாவுடைய கோபத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்குமளவுக்கு வானத்தை அதிரச்செய்வேன்.
14 அப்பொழுது வேட்டையாடப்படும் மானைப்போலவும், மேய்ப்பனில்லாத செம்மறியாட்டைப் போலவும், ஒவ்வொருவனும் தன் சொந்த மக்களிடம் திரும்புவான்; ஒவ்வொருவனும் தன் சொந்த நாட்டுக்குத் தப்பியோடுவான்.
௧௪துரத்தப்பட்ட வெளிமானைப்போலும், யாரும் சேர்க்காத ஆட்டைப்போலும் இருப்பார்கள்; அவரவர் தங்கள் மக்களிடத்திற்குப்போக முகத்தைத்திருப்பி, அவரவர் தங்கள் தேசத்திற்கு ஓடிப்போவார்கள்.
15 கைதியாக்கப்பட்டவன் குத்தப்படுவான்; அகப்பட்டவன் வாளினால் சாவான்.
௧௫பிடிபட்ட எவனும் குத்தப்பட்டு, அவர்களைச் சேர்ந்திருந்த எவனும் பட்டயத்தால் விழுவான்.
16 அவர்களுடைய குழந்தைகள் அவர்கள் கண்களின்முன் மோதியடிக்கப்பட்டு, துண்டுகளாக்கப்படுவார்கள்; அவர்களுடைய வீடுகள் கொள்ளையிடப்படும், அவர்களுடைய மனைவிகள் அவமானப்படுவார்கள்.
௧௬அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும்; அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்; அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள்.
17 பாருங்கள், மேதியரை நான் அவர்களுக்கு எதிராக எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதியாதவர்கள், தங்கத்தில் மகிழ்ச்சி கொள்ளாதவர்கள்.
௧௭இதோ, நான் அவர்களுக்கு விரோதமாக மேதியரை எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதிக்காமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும்,
18 அவர்களின் வில்லுகள் வாலிபரைத் தாக்கி வீழ்த்தும்; அவர்கள் குழந்தைகளுக்கு இரக்கம் காட்டமாட்டார்கள், சிறுபிள்ளைகள்மேல் கருணை காட்டவுமாட்டார்கள்.
௧௮வில்லுகளால் இளைஞர்களை கொன்றுவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் மனமிரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை.
19 பாபிலோன், சோதோம் கொமோராவைப்போல் இறைவனால் கவிழ்க்கப்படும். இதுவே அரசுகளின் மேன்மையாகவும், கல்தேயரின் பெருமையின் சிறப்பாகவும் இருந்தது.
௧௯நாடுகளுக்குள் அலங்காரமும், கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும்.
20 வரும் தலைமுறைகளில் ஒருவரும் இனியொருபோதும் அங்கு குடியேறவோ, வசிக்கவோ மாட்டார்கள். அரேபியன் எவனும் அங்கு தனது கூடாரத்தைப் போடமாட்டான். மேய்ப்பன் தன் மந்தைகளை அங்கு இளைப்பாற விடவுமாட்டான்.
௨0இனி ஒருபோதும், அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கியிருப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம் போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர்கள் மந்தையை கூட்டுவதுமில்லை.
21 ஆனால் அங்கு பாலைவன மிருகங்கள் தங்கும்; அவர்களுடைய வீடுகள் நரிகளால் நிரம்பும். ஆந்தைகள் அங்கே குடியிருக்கும்; காட்டாடுகளும் அங்கே துள்ளி விளையாடும்.
௨௧காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், ஆந்தைகள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு அங்கே துள்ளும்.
22 அரண்செய்யப்பட்ட இடங்களில் ஓநாய்களும், அதன் அலங்காரமான அரண்மனைகளில் நரிகளும் ஊளையிடும். பாபிலோனுக்குரிய வேளை வந்துவிட்டது. அதன் நாட்கள் நீடிக்காது.
௨௨அவர்கள் பாழான மாளிகைகளில் நரிகள் ஊளையிடும்; வலுசர்ப்பங்கள் அவர்கள் சேதப்படுத்தின அரண்மனைகளில் ஒன்றாகக் கூடும்; அதின் காலம் சீக்கிரம் வரும், அதின் நாட்கள் நீடிக்காது என்கிறார்.

< ஏசாயா 13 >