< ஓசியா 12 >

1 எப்பிராயீம் காற்றை மேய்கிறான், நாள்முழுவதும் கொண்டற்காற்றைப் பின்தொடர்ந்து செல்கிறான். பொய்களையும், வன்செயல்களையும் பெருகப்பண்ணுகிறான். அவன் அசீரியாவோடு ஒப்பந்தம் செய்கிறான்; எகிப்திற்கு ஒலிவ எண்ணெய் அனுப்புகிறான். 2 யூதாவுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு யெகோவாவிடம் இருக்கிறது. யாக்கோபின் மக்களை அவர்களுடைய வழிகளுக்குத்தக்கதாக அவர் தண்டிப்பார்; அவர்களுடைய செயல்களுக்கேற்றபடி அவர்களுக்குப் பிரதிபலன் செய்வார். 3 யாக்கோபு தாயின் கர்ப்பத்திலேயே, தனது சகோதரனின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டான்; மனிதனானபோது இறைவனோடு போராடினான். 4 அவன் தூதனுடனும் போராடி வெற்றிகொண்டான்; அவன் அவருடைய தயவுக்காக அழுது மன்றாடினான். இறைவன் அவனைப் பெத்தேலில் கண்டு, அங்கே நம்முடன் பேசினார். 5 சேனைகளின் இறைவனாகிய யெகோவா அவரே; யெகோவா என்பது அவரது புகழ்வாய்ந்த பெயர். 6 யாக்கோபின் மக்களே, நீங்கள் எல்லோரும் இறைவனிடம் திரும்பிவாருங்கள். அன்பையும் நீதியையும் கடைபிடியுங்கள்; எப்பொழுதும் உங்கள் இறைவனுக்காகக் காத்திருங்கள். 7 ஆனால் இப்பொழுது நீங்கள் கள்ளத்தராசுகளைப் பயன்படுத்துகிற வியாபாரிபோல் இருக்கிறீர்கள்; அவன் ஏமாற்றுவதையே விரும்புகிறான். 8 அத்துடன் எப்பிராயீமோ, “நான் மிகவும் பணக்காரன்; நான் செல்வந்தனாகிவிட்டேன். என் செல்வத்தினிமித்தம் அவர்கள் என்னில் அநியாயத்தையோ, பாவத்தையோ கண்டுபிடிக்க முடியாது என்று பெருமைப்படுகிறான்.” 9 “உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே. நான் உங்களது நியமிக்கப்பட்ட பண்டிகையின் நாட்களில் இருப்பதுபோல, நான் திரும்பவும் உங்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணுவேன். 10 அத்துடன் நான் இறைவாக்கினருடன் பேசி, அவர்களுக்கு அநேக தரிசனங்களைக் கொடுத்தேன்; அவர்களைக்கொண்டு உவமைகளினால் பேசினேன்.” 11 கீலேயாத் கொடுமையானதா? அதன் மக்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்; கில்காலில் காளைகளைப் பலியிடுகிறார்களா? அவர்களுடைய பலிபீடங்கள் உழுத வயலிலுள்ள கற்குவியலைப்போல் ஆகும். 12 யாக்கோபு ஆராமுக்கு ஓடிப்போனான்; இஸ்ரயேல் தனக்கு மனைவியைப் பெறுவதற்காக வேலைசெய்தான்; அவளுக்கான பணத்தைக் கொடுப்பதற்கு செம்மறியாடுகளை மேய்த்தான். 13 யெகோவா இறைவாக்கினன் ஒருவனை அனுப்பி, இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்; இறைவாக்கினன் மூலம் இஸ்ரயேலரை பராமரித்தார். 14 ஆயினும் எப்பிராயீம் யெகோவாவுக்குக் கசப்பாகக் கோபமூட்டியிருக்கிறான்; எனவே அவனுடைய யெகோவா, அவனுடைய இரத்தப்பழியை அவன் மேலேயே சுமத்துவார். அவன் காட்டிய அவமதிப்புக்குத்தக்கதாய் அவனுக்குப் பதில் செய்வார்.

< ஓசியா 12 >