< சங்கீதம் 97 >

1 யெகோவா ஆட்சி செய்கிறார், பூமி களிகூரட்டும்; தொலைவில் உள்ள தீவுகள் மகிழட்டும். 2 மேகங்களும் காரிருளும் அவரைச் சூழ்கின்றன; நேர்மையுடனும் நீதியுடனும் அவர் ஆளுகை செய்கிறார். 3 நெருப்பு அவருக்கு முன்சென்று, சுற்றிலுமுள்ள அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது. 4 அவருடைய மின்னல் உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கிறது; பூமி அதைக்கண்டு நடுங்குகிறது. 5 யெகோவாவுக்கு முன்பாக, பூமியனைத்திற்கும் ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாகவே மலைகள் மெழுகுபோல் உருகுகின்றன. 6 வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கிறது; எல்லா நாடுகளும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள். 7 உருவச்சிலைகளை வணங்குகிற அனைவரும், விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்கள்; தெய்வங்களே, நீங்களெல்லோரும் யெகோவாவையே வழிபடுங்கள். 8 யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகளினால் சீயோன் கேட்டுக் களிகூருகிறது; யூதாவின் கிராமங்களும் மகிழ்கின்றன. 9 யெகோவாவே, நீரோ பூமியெங்கும் மகா உன்னதமானவராய் இருக்கிறீர்; எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக நீரே உயர்த்தப்பட்டிருக்கிறீர். 10 யெகோவாவை நேசிக்கிறவர்கள் தீமையை வெறுக்கட்டும்; ஏனெனில் அவர் தமக்கு உண்மையுள்ளோரின் உயிர்களைக் காப்பாற்றி, கொடியவர்களின் கைகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறார். 11 நீதிமான்கள்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது, இருதயத்தில் நீதி உள்ளவர்களுக்குக் களிப்புண்டாகிறது. 12 நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள், அவருடைய பரிசுத்தத்தை நினைத்துத் துதியுங்கள்.

< சங்கீதம் 97 >