< சங்கீதம் 87 >

1 கோராகின் மகன்களின் பாட்டாகிய சங்கீதம். யெகோவா தமது அஸ்திபாரத்தைப் பரிசுத்த மலையில் அமைத்திருக்கிறார். 2 யெகோவா யாக்கோபிலுள்ள எல்லா வாழ்விடங்களைப் பார்க்கிலும், சீயோனின் வாசல்களை நேசிக்கிறார். 3 இறைவனின் நகரமே, உன்னைக்குறித்து மகிமையான காரியங்கள் சொல்லப்படுகின்றன: 4 “என்னை ஏற்றுக்கொள்ளுகிறவர்களோடு நான் ராகாபையும் பாபிலோனையும் குறித்து, ‘இவர்கள் சீயோனிலே பிறந்தவர்கள்’ என்று சொல்வேன்; பெலிஸ்தியாவையும் தீருவையும் எத்தியோப்பியாவையும் குறித்தும் அப்படியே சொல்வேன்.” 5 உண்மையாகவே சீயோனைக் குறித்து, “இன்னார் இன்னார் அங்கே பிறந்தார்கள் என்றும், மகா உன்னதமானவர் தாமே அதை நிலைநிறுத்துவார்” என்றும் சொல்லப்படும். 6 “இன்னார் சீயோனிலே பிறந்தார்” என்பதாக யெகோவா மக்களின் பதிவேட்டில் எழுதுவார். 7 அவர்கள் இசை மீட்டும்பொழுது, “எங்கள் ஊற்றுகள் எல்லாம் உம்மிலேயே இருக்கிறது” என்று பாடுவார்கள்.

< சங்கீதம் 87 >