< சங்கீதம் 52 >

1 தாவீது அகிமெலேக்கின் வீட்டிற்கு சென்றான் என்று ஏதோமியனாகிய தோவேக்கு வந்து சவுலுக்கு சொன்னபோது பாடிய மஸ்கீல் என்னும் சங்கீதம். பலவானே, ஏன் தீமையைப்பற்றி பெருமை பாராட்டுகிறாய்? இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பு எந்நாளும் உள்ளது. 2 வஞ்சகம் செய்கிறவனே, உன் நாவு அழிவை ஏற்படுத்த சதி செய்கிறது; அது தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போலிருக்கிறது. 3 நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையையும் உண்மை பேசுவதைவிட பொய்யையும் விரும்புகிறாய். 4 வஞ்சக நாவே, நீ அனைத்துத் தீங்கான வார்த்தைகளை விரும்புகிறாய்! 5 இறைவன் உன்னை நிச்சயமாகவே நித்திய அழிவுக்குள்ளாக்குவார்: அவர் உன்னை உன் கூடாரத்திலிருந்து விலக்கி, வாழ்வோரின் நாட்டிலிருந்து உன்னை வேரோடு எடுத்துப் போடுவார். 6 இதைக்கண்டு நீதிமான்கள் பயப்படுவார்கள்; அவர்கள் அவனைப் பார்த்து சிரித்து, 7 “இதோ பாருங்கள், இவன் இறைவனைத் தன் அரணாகக் கொள்ளாதவன்; தன் மிகுந்த செல்வத்தில் நம்பிக்கை வைத்து, தன்னுடைய அக்கிரமத்தில் பலத்துக்கொண்ட மனிதன்!” என்பார்கள். 8 ஆனால் நானோ, செழித்து வளரும் ஒலிவமரத்தைப் போல் இறைவனின் ஆலயத்தில் இருக்கிறேன்; நான் இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பில் எப்பொழுதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். 9 நீர் எனக்குச் செய்தவற்றிற்காக உமது பரிசுத்தவான்களுக்கு முன்பாக நான் உம்மை என்றென்றும் துதிப்பேன், உம்முடைய பெயரில் நான் எதிர்பார்ப்பை வைப்பேன்; இறைவனே உமது பெயர் நல்லது.

< சங்கீதம் 52 >