< சங்கீதம் 43 >

1 இறைவனே, என் நீதியை மெய்ப்பித்துக் காட்டும்; இறை பக்தியற்ற நாட்டினருக்கு விரோதமாய் எனக்காக வழக்காடும், வஞ்சகமும் கொடுமையுமான மனிதரிடமிருந்து என்னைத் தப்புவியும். 2 ஏனெனில் நீரே என் இறைவன், என் கோட்டை. நீர் ஏன் என்னைப் புறக்கணித்துவிட்டீர்? பகைவனால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடன் திரியவேண்டும்? 3 உமது ஒளியையும் உமது உண்மையையும் அனுப்பும்; அவை எனக்கு வழிகாட்டட்டும். நீர் குடியிருக்கும் இடமான உமது பரிசுத்த மலைக்கு அவை என்னைக் கொண்டுவரட்டும். 4 அப்பொழுது இறைவனின் பலிபீடத்தண்டைக்குப் போவேன்; என் மகிழ்ச்சியும் என் களிப்புமான இறைவனிடத்திற்குப் போவேன். இறைவனே, என் இறைவனே, யாழ் இசைத்து உம்மைத் துதிப்பேன். 5 என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்? இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு; நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக இன்னும் அவரைத் துதிப்பேன்.

< சங்கீதம் 43 >