< சங்கீதம் 40 >

1 பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். நான் யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என் பக்கமாய்த் திரும்பி என் கதறுதலைக் கேட்டார். 2 அழிவின் குழியிலிருந்தும் மண் சகதியிலிருந்தும் அவர் என்னை வெளியே தூக்கியெடுத்தார், அவர் கற்பாறைமேல் என் கால்களை நிறுத்தி, நிற்பதற்கு ஒரு உறுதியான இடத்தையும் எனக்குக் கொடுத்தார். 3 எங்கள் இறைவனைத் துதிக்கும் ஒரு துதியின் கீதமான புதுப்பாட்டை அவர் என் வாயிலிருந்து வரச்செய்தார். அநேகர் அதைக்கண்டு பயந்து, யெகோவாவிடம் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள். 4 பொய்யான கடவுள்களைப் பற்றிக்கொள்ளாமலும், அகந்தை உள்ளவர்களைச் சாராமலும், யெகோவாவைத் தனது நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 5 என் இறைவனாகிய யெகோவாவே, நீர் எங்களுக்காக செய்துள்ள அதிசயங்களும் உம்முடைய திட்டங்களும் அநேகம். உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை; அவைகளைக் குறித்து நான் விவரிக்கப்போனால், அவை எடுத்துரைக்க முடியாதளவு ஏராளமானவைகள். 6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; தகன காணிக்கைகளும் பாவநிவாரண காணிக்கைகளும் உமக்குத் தேவையில்லை; ஆனால் நான் கேட்டுக் கீழ்ப்படிவதற்கு என் செவிகளைத் திறந்துவிட்டீர். 7 அப்பொழுது நான், “இதோ, நான் வருகிறேன்; புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறதே. 8 என் இறைவனே, நான் உமது விருப்பத்தைச் செய்ய விரும்புகிறேன்; உமது சட்டம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று சொன்னேன். 9 மகா சபையில் உமது நீதியை பிரசித்தப்படுத்துகிறேன்; யெகோவாவே, நீர் அறிந்திருக்கிறபடி நான் என் உதடுகளை மூடுவதில்லை. 10 நான் உமது நீதியை என் உள்ளத்தில் மறைப்பதில்லை; உமது உண்மையையும், இரட்சிப்பையும் குறித்து நான் பேசுகிறேன். உமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் மகா சபைக்கு நான் மறைக்கவுமில்லை. 11 யெகோவாவே, எனக்கு இரக்கத்தைக் காட்டாமல் விடாதேயும்; உமது உடன்படிக்கையின் அன்பும் உமது உண்மையும் எப்போதும் என்னைப் பாதுகாப்பதாக. 12 ஏனெனில் எண்ணற்ற இன்னல்கள் என்னைச் சூழ்கின்றன; என் பாவங்கள் என்னை மூடிக்கொண்டதால், நான் பார்க்க முடியாதிருக்கிறேன். என் தலையிலுள்ள முடியைப் பார்க்கிலும், அவைகள் அதிகமானவை; அதினால் என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. 13 யெகோவாவே, தயவுசெய்து என்னைக் காப்பாற்றும்; யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும். 14 என் உயிரை அழிக்கத் தேடுகிற யாவரும் வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக; எனது அழிவை விரும்புகிற யாவரும் அவமானமடைந்து திரும்புவார்களாக. 15 என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள் அவர்களுடைய வெட்கத்தினால் நிலைகுலைந்து போவார்களாக. 16 ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக; உமது இரட்சிப்பை விரும்புவோர், “யெகோவா பெரியவர்!” என்று எப்போதும் சொல்வார்களாக. 17 நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; யெகோவா என்னை நினைப்பாராக. நீரே என் துணை, நீரே என் மீட்பர்; என் இறைவனே, தாமதியாதேயும்.

< சங்கீதம் 40 >