< சங்கீதம் 39 >

1 பாடகர் குழுத் தலைவனாகிய எதுத்தூனுக்கு ஒப்புவித்த தாவீதின் சங்கீதம். நான் சொன்னேன்: “நான் என் வழிகளைக் கவனித்து, என் நாவைப் பாவத்துக்கு விலக்கிக் காத்துக்கொள்வேன். கொடியவர்கள் எனக்குமுன் இருக்கும்வரை, நான் என் வாயை கடிவாளத்தால் பாதுகாப்பேன்.” 2 நான் பேசாமல் ஊமையாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் இருந்தேன். ஆனால் என் வேதனை அதிகரித்தது; 3 என் உள்ளம் எனக்குள்ளே அனல் கொண்டது; நான் தியானிக்கையில், அது நெருப்பாய்ப் பற்றிக்கொண்டது; அப்பொழுது என் நாவினால் இதைப் பேசினேன்: 4 “யெகோவாவே, என் வாழ்க்கையின் முடிவையும், என் வாழ்நாளின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும்; என் வாழ்வு இவ்வளவுதான் என்பதை எனக்குத் தெரியப்பண்ணும். 5 என் வாழ்நாட்களை நான்கு விரலளவாக்கினீர்; எனது ஆயுட்காலமோ உமக்கு முன்பாக இல்லாததுபோல் தோன்றுகிறது; பாதுகாப்பாய் இருப்பதுபோல தோன்றும் எல்லா மனிதரின் நிலையும் கானல்நீரைப் போன்றதே. 6 “மனிதன் வெறும் மாயையாகவே நடந்து திரிகிறான்; அவன் ஓடியோடி உழைத்து வீணாகவே அவன் செல்வத்தைச் சேர்த்துக் குவித்தாலும், அது யாரைப் போய்ச்சேரும் என அவன் அறியான். 7 “ஆனாலும் யெகோவாவே, நான் எதற்காகக் காத்திருக்கிறேன்? என் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது. 8 என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்; என்னை மூடரின் கேலிப் பொருளாக்காதேயும். 9 நான் மவுனமாயிருந்தேன்; நீரே இதைச் செய்தவராதலால், நான் என் வாயைத் திறக்கமாட்டேன். 10 உமது வாதையை என்னை விட்டகற்றும்; உமது கரத்தின் தாக்குதலால் நான் இளைத்துப் போனேன். 11 பாவத்தினிமித்தம் நீர் மனிதர்களைக் கண்டித்துத் தண்டிக்கும்போது, நீர் அவர்களுடைய செல்வத்தைப் பூச்சி அரிப்பதுபோல் கரைத்துவிடுகிறீர்; நிச்சயமாகவே எல்லா மனிதரும் கானல்நீரைப் போன்றவர்களே. 12 “யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; உதவிகேட்டு நான் கதறும் கதறுதலுக்குச் செவிகொடும்; என் அழுகையைக் கேளாமல் இருக்கவேண்டாம். என் தந்தையர்கள் எல்லோரையும் போலவே, நானும் உம்முடன் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனாகவும், குடியுரிமை அற்றவனாகவும் குடியிருக்கிறேன். 13 நான் இவ்விடத்தைவிட்டுப் பிரிந்து இல்லாமல் போகுமுன்னே, நான் திரும்பவும் மகிழும்படியாய், உமது கோபத்தின் பார்வையை என்னைவிட்டு அகற்றும்.”

< சங்கீதம் 39 >