< சங்கீதம் 141 >

1 தாவீதின் சங்கீதம். யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடம் விரைந்து வாரும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என் குரலைக் கேளும். 2 என் மன்றாட்டு உமக்கு முன்பாகத் தூபத்தைப்போல் ஏற்றுக்கொள்ளப்படட்டும்; என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும். 3 யெகோவாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். 4 தீமைகளைச் செய்யும் மனிதரோடு சேர்ந்து கொடுமையான செயல்களில் பங்குகொள்ளும்படி என் இருதயத்தைத் தீமையின் பக்கம் இழுப்புண்டுபோக விடாதேயும்; அவர்களுடைய ருசியான பண்டங்களை நான் சாப்பிடவும் விடாதேயும். 5 நீதிமான் என்னை அடிக்கட்டும், அந்த அடி தயவானது; நீதிமான் என்னைக் கண்டிக்கட்டும், அது என் தலைக்கு எண்ணெயைப்போல் இருக்கும். என் தலை அதை புறக்கணிக்காது; என் மன்றாட்டு எப்பொழுதும் தீயோரின் செய்கைகளுக்கு விரோதமாகவே இருக்கிறது. 6 அவர்களுடைய ஆளுநர்கள் செங்குத்தான பாறைகளிலிருந்து கீழே தள்ளிவிடப்படுவார்கள்; அப்பொழுது, என் வார்த்தைகள் உண்மையாக இருந்ததை கொடியவர்கள் புரிந்துகொள்வார்கள். 7 “ஒரு நபர் நிலத்தை உழுது கிளறுவதுபோல், எங்கள் எலும்புகள் பாதாளத்தின் வாசலில் சிதறடிக்கப்பட்டன” என்று அவர்கள் சொல்வார்கள். (Sheol h7585) 8 ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, என் கண்கள் உம்மையே நோக்குகின்றன; நான் உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறேன், என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடாதேயும். 9 தீயவர் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்தும், அவர்களால் வைக்கப்பட்ட சுருக்குக் கயிறுகளிலிருந்தும் என்னைக் காத்துக்கொள்ளும். 10 நான் அவற்றைப் பாதுகாப்பாய் கடக்க, கொடியவர்கள் தங்கள் வலைகளிலேயே அகப்படட்டும்.

< சங்கீதம் 141 >