< சங்கீதம் 138 >

1 தாவீதின் சங்கீதம். யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; “தெய்வங்கள்” முன்னிலையில் நான் உமக்குத் துதி பாடுவேன். 2 நான் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப் பணிந்து, உமது உடன்படிக்கையின் அன்புக்காகவும் உம்முடைய சத்தியத்திற்காகவும், உமது பெயரைத் துதிப்பேன்; ஏனெனில் எல்லாக் காரியங்களுக்கும் மேலாக உமது பெயரையும், உமது வார்த்தையையும் உயர்த்தியிருக்கிறீர். 3 நான் கூப்பிட்டபோது நீர் எனக்குப் பதில் கொடுத்தீர்; நீர் என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை மிகவும் தைரியப்படுத்தினீர். 4 யெகோவாவே, பூமியின் அரசர்கள் எல்லோரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிக்கட்டும். 5 யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால், அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள். 6 யெகோவா உயர்ந்தவராக இருந்தும், தாழ்மையுள்ளவர்களை அக்கறையுடன் நோக்கிப் பார்க்கிறார்; ஆனால் பெருமையுள்ளவர்களையோ அவர் தூரத்திலிருந்தே அறிகிறார். 7 துன்பத்தின் மத்தியிலே நான் நடக்கின்றபோதிலும், நீர் என் உயிரைப் பாதுகாக்கிறீர். என் பகைவரின் கோபத்திற்கு எதிராக நீர் உமது கையை நீட்டுகிறீர்; உமது வலதுகரத்தினால் என்னைக் காப்பாற்றுகிறீர். 8 யெகோவா என்னைக் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்றுவார்; யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது; உமது கரத்தின் செயல்களைக் கைவிடாதேயும்.

< சங்கீதம் 138 >