< சங்கீதம் 114 >

1 இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, யாக்கோபின் குடும்பத்தார் வேறுநாட்டைச் சேர்ந்த மக்களிடமிருந்து வெளியே வந்தபோது, 2 யூதா, இறைவனின் பரிசுத்த இடமாயிற்று; இஸ்ரயேல் அவருடைய அரசாட்சி ஆயிற்று. 3 கடல் அவர்களைக் கண்டு ஓடி ஒதுங்கியது; யோர்தான் நதி அதின் வழியை மாற்றியது. 4 மலைகள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகள்போலவும் துள்ளின. 5 கடலே, நீ விலகி ஒதுங்கியது ஏன்? யோர்தான் நதியே, நீ ஓடாமல் நின்றது ஏன்? 6 மலைகளே, நீங்கள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், குன்றுகளே, நீங்கள் செம்மறியாட்டுக் குட்டிகளைப் போலவும் துள்ளியது ஏன்? 7 பூமியே, யெகோவாவின் சமுகத்தில் நடுங்கு, யாக்கோபின் இறைவனின் சமுகத்தில் நடுங்கு. 8 அவர் கற்பாறையைக் குளமாகவும், கடினமான கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றினாரே.

< சங்கீதம் 114 >