< யோபு 9 >

1 அப்பொழுது யோபு மறுமொழியாக சொன்னது:
அதற்கு யோபு மறுமொழியாக:
2 “நீ சொல்வது உண்மையென நான் அறிவேன். மனிதன் எப்படி இறைவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கமுடியும்?
“ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்; தேவனுக்கு முன்பாக மனிதன் நீதிமானாயிருப்பதெப்படி?
3 இறைவனோடு மனிதன் வாதாட விரும்பினால், அவர் கேட்கும் ஆயிரத்தில் ஒரு கேள்விக்குக்கூட அவனால் பதிலளிக்க முடியாது.
அவர் அவனுடன் வழக்காட விருப்பமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு பதில் சொல்லமாட்டானே.
4 இறைவன் இருதயத்தில் ஞானமுள்ளவர், வல்லமையில் பலமுள்ளவர். அவரை எதிர்த்து சேதமின்றித் தப்பினவன் யார்?
அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?
5 அவர் மலைகளை அவைகளுக்குத் தெரியாமலே நகர்த்துகிறார்; அவர் தன் கோபத்தில் அவற்றைப் புரட்டிப் போடுகிறார்.
அவர் மலைகளை திடீரென்று பெயர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.
6 அவர் பூமியின் தூண்கள் அதிரும்படி அதை அதின், இடத்திலிருந்து அசையவைக்கிறார்.
பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் இடத்திலிருந்து அசையவைக்கிறார்.
7 அவர் கட்டளையிட்டால், சூரியனும் ஒளி கொடாதிருக்கும்; நட்சத்திரங்களின் ஒளியையும் மூடி மறைக்கிறார்.
அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.
8 அவர் தனிமையாகவே வானங்களை விரித்து, கடல் அலைகளின்மேல் மிதிக்கிறார்.
அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.
9 சப்தரிஷி, மிருகசீரிடம், கார்த்திகை நட்சத்திரங்களையும், தென்திசை நட்சத்திரக் கூட்டங்களையும் படைத்தவர் அவரே.
அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும், அறுமீனையும், தெற்கு மண்டலங்களையும் உண்டாக்கினவர்.
10 அவர் ஆழ்ந்தறிய முடியாத அதிசயங்களையும் அவர் கணக்கிடமுடியாத அற்புதங்களையும் செய்கிறார்.
௧0ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
11 அவர் என்னைக் கடந்து செல்லும்போது, அவரை என்னால் காணமுடியாது; அவர் என் அருகில் வரும்போது, அவரை என்னால் பார்க்க முடியாது.
௧௧இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைப் பார்க்கமுடியவில்லை; அவர் கடந்துபோகிறார், நான் அவரை அறியவில்லை.
12 அவர் எதையும் பறித்தெடுத்தால் அதை யாரால் நிறுத்த முடியும்? ‘நீர் என்ன செய்கிறீர்?’ என யாரால் அவரிடம் கேட்க முடியும்?
௧௨இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை தடுப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?
13 இறைவன் தமது கோபத்தைக் கட்டுப்படுத்தவில்லை; ராகாப் என்ற பெரிய விலங்கைச் சேர்ந்தவர்களும் அவருடைய காலடியில் அடங்கிக் கிடந்தனர்.
௧௩தேவன் தம்முடைய கோபத்தை நிறுத்தமாட்டார்; ஒருவருக்கொருவர் துணைநிற்கிற அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும்.
14 “இப்படியிருக்க, நான் அவரோடு எப்படி விவாதம் செய்வேன்? அவரோடு வாதாடும் வார்த்தைகளை நான் எங்கே கண்டுபிடிப்பேன்?
௧௪இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், அவருடன் வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளவும் நான் எம்மாத்திரம்?
15 நான் நீதிமானாயிருந்தாலும் என்னால் அவருடன் வழக்காட முடியாது; எனது நீதிபதியிடம் இரக்கத்திற்காக மன்றாடத்தான் என்னால் முடியும்.
௧௫நான் நீதிமானாயிருந்தாலும் அவருடன் வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்காகக் கெஞ்சுவேன்.
16 அவர் என் அழைப்பிற்கு இணங்கினாலும், என் விண்ணப்பத்திற்குச் செவிகொடுப்பார் என நான் நம்பவில்லை.
௧௬நான் கெஞ்சுவதினாலும், அவர் எனக்கு பதில் கொடுத்தாலும், அவர் என் விண்ணப்பத்தைக் கேட்டார் என்று நம்பமாட்டேன்.
17 அவர் என்னைப் புயலினால் தாக்குவார்; காரணமில்லாமல் அவர் என் காயங்களைப் பலுகச்செய்வார்.
௧௭அவர் புயலினால் என்னை முறிக்கிறார்; காரணமில்லாமல் அநேக காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.
18 அவர் என்னைத் திரும்பவும் மூச்சுவிட முடியாமல் துன்பத்திற்குள் அமிழ்த்தி விடுவார்.
௧௮நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், கசப்பினால் என்னை நிரப்புகிறார்.
19 பெலத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் அவரே வல்லமையுடையவர். நீதியை எடுத்துக்கொண்டால் அவரை விசாரணைக்கு அழைப்பவன் யார்?
௧௯பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால் என் பக்கத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்?
20 நான் மாசற்றவனாய் இருந்தாலும் என் வாயே எனக்குக் குற்றத் தீர்ப்பளிக்கும்; நான் குற்றமற்றவனாய் இருந்தாலும், அது என்னைக் குற்றவாளி எனத் தீர்க்கும்.
௨0நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.
21 “நான் குற்றமற்றவன், என்னைப்பற்றி எனக்கு அக்கறையில்லை; என் சொந்த வாழ்வையே நான் வெறுக்கிறேன்.
௨௧நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்; என் வாழ்க்கையை வெறுப்பேன்.
22 எல்லாம் ஒன்றுதான்; அதினால்தான் நான் சொல்கிறேன், ‘குற்றமற்றவர்களையும், கொடியவர்களையும் அவர் அழிக்கிறார்.’
௨௨ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்.
23 வாதை திடீர் மரணத்தைக் கொண்டுவரும்போது, அவர் குற்றமற்றவனின் தவிப்பைக் கண்டு ஏளனம் செய்கிறார்.
௨௩வாதையானது உடனே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து சிரிக்கிறார்.
24 நாடு கொடியவர்களின் கையில் விழும்போது, அவர் அதின் நீதிபதிகளின் கண்களை மூடிக் கட்டுகிறார். அவர் அதைச் செய்யவில்லையென்றால் அதைச் செய்வது வேறு யார்?
௨௪உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், வேறு யார் இதைச் செய்கிறார்.
25 “எனது நாட்கள் ஓடுபவனைவிட வேகமாய்ப் போகின்றன; அவை ஒருகண நேர மகிழ்ச்சியும் இல்லாமல் பறந்து போகின்றன.
௨௫என் நாட்கள் தபால்காரர் ஓட்டத்திலும் வேகமாயிருக்கிறது; அவைகள் நன்மையைப் பார்க்காமல் பறந்துபோகும்.
26 நாணல் படகுகள் வேகமாகச் செல்வது போலவும், தங்கள் இரைமேல் பாய்கிற கழுகுகளைப் போலவும் அவை பறந்து போகின்றன.
௨௬அவைகள் வேகமாக ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.
27 ‘நான் என் குற்றச்சாட்டை மறந்து, என் முகபாவனையை மாற்றி சிரிப்பேன்’ என்று சொன்னாலும்,
௨௭என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,
28 நான் இன்னும் என் பாடுகளைக் குறித்துத் திகிலடைகிறேன்; நீர் என்னைக் குற்றமற்றவனாக எண்ணமாட்டீர் என்றும் அறிவேன்.
௨௮என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக நினைக்கமாட்டீர் என்று அறிவேன்.
29 நான் ஏற்கெனவே குற்றவாளி என்பது தீர்க்கப்பட்டிருக்க, ஏன் வீணாய் போராட வேண்டும்?
௨௯நான் பொல்லாதவனாயிருந்தால், வீணாகப் போராடவேண்டியது என்ன?
30 நான் என்னை பனிநீரினால் கழுவினாலும், என் கைகளை சோப்பினால் சுத்தப்படுத்தினாலும்,
௩0நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளை சோப்பினால் சுத்தம்செய்தாலும்,
31 நீர் என்னைச் சேற்றின் குழிக்குள் அமிழ்த்துவீர். அப்பொழுது என் சொந்த உடைகளே என்னை அருவருக்கும்.
௩௧நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் உடையே என்னை அருவருக்கும்.
32 “நான் அவருக்குப் பதிலளிக்கவும், அவரை நீதிமன்றத்தில் எதிர்க்கவும் அவர் என்னைப்போல் ஒரு மனிதனல்ல.
௩௨நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும், நாங்கள் ஒன்றுகூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனிதன் அல்லவே.
33 எங்கள் இருவருக்கும் நடுவராயிருந்து தீர்ப்புக்கூறவும், எங்கள் இருவர்மேலும் தம் கையை வைத்து,
௩௩எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க நடுவர் எங்களுக்குள் இல்லையே.
34 என்னிடத்திலிருந்து இறைவனது தண்டனையின் கோலை அகற்ற ஒருவர் இருந்தால் நலமாயிருக்குமே; அவருடைய பயங்கரம் என்னைப் பயமுறுத்தாது.
௩௪அவர் தமது கோலை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கவைக்காதிருப்பதாக.
35 நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன், ஆனால் இப்போதைய நிலையில் அப்படிப் பேச என்னால் முடியாது.
௩௫அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.

< யோபு 9 >