< ஏசாயா 56 >

1 யெகோவா சொல்வது இதுவே: “நியாயத்தைக் கைக்கொண்டு நீதியைச் செய்யுங்கள். ஏனெனில், எனது இரட்சிப்பு சமீபமாய் இருக்கிறது; எனது நீதி விரைவில் வெளிப்படுத்தப்படும். 2 இதை செய்கிறவர்களும், இவற்றை உறுதியாய் பற்றிக்கொண்டு கைக்கொண்டு, ஓய்வுநாளை தூய்மைக்கேடாக்காமல் கடைபிடித்து, தீமைசெய்யாதபடி தன் கையை விலக்கிக் காத்துக்கொள்கிற மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.” 3 யெகோவாவோடு தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் அந்நியர், “யெகோவா என்னைத் தமது மக்களிடமிருந்து நிச்சயமாகப் பிரித்துவிடுவார்” என்று சொல்லாமல் இருக்கட்டும். அவ்வாறே அண்ணகன் எவனும், “நான் பட்டுப்போன மரந்தானே” என்று முறைப்பாடு சொல்லாமலும் இருக்கட்டும். 4 யெகோவா சொல்வது இதுவே: “எனது ஓய்வுநாளை கடைப்பிடித்து, எனக்கு விருப்பமானவற்றைத் தெரிந்துகொண்டு என் உடன்படிக்கையை உறுதியாய்க் கைக்கொள்கிறவர்களான அண்ணகர்களுக்கு, 5 என் ஆலயத்திற்குள்ளும், அதின் சுவர்களிலும் ஒரு நினைவுச் சின்னத்தையும், மகன்கள் மற்றும் மகள்களுக்குமுரிய பெயர்களைவிடச் சிறந்த ஒரு பெயரையும் கொடுப்பேன். ஒருபோதும் அழிந்துபோகாதிருக்கிற நித்திய பெயரையும் அவர்களுக்குக் கொடுப்பேன். 6 யெகோவாவை அண்டியிருந்து, அவருக்கு ஊழியம் செய்து, யெகோவாவினுடைய பெயரை நேசித்து அவரை வழிபடும் பிறதேசத்தார் அனைவருக்கும், ஓய்வுநாட்களை தூய்மைக்கேடாக்காமல் அதைக் கைக்கொண்டு எனது உடன்படிக்கையை உறுதியாய் பற்றிக்கொள்ளும் அனைவருக்கும் சொல்வதாவது: 7 நான் அவர்களை என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவந்து, என் ஜெபவீட்டில் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பேன். அவர்களின் தகனபலிகளும், மற்ற பலிகளும் எனது பலிபீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். ஏனெனில், எனது வீடு எல்லா நாடுகளுக்கும் ஜெபவீடு என்று அழைக்கப்படும். 8 நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரைச் சேர்க்கும் ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்: ஏற்கெனவே சேர்க்கப்பட்டவர்களோடுகூட இன்னும் மற்றவர்களையும் நான் கூட்டிச்சேர்ப்பேன்.” 9 வயலின் மிருகங்களே, எல்லோரும் வாருங்கள். காட்டு மிருகங்களே, எல்லோரும் வந்து இரையை விழுங்குங்கள். 10 இஸ்ரயேலின் காவலாளிகள் அனைவரும் அறிவில்லாத குருடர்; அவர்கள் எல்லோரும் குரைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; அவர்கள் படுத்துக் கிடந்து கனவு காண்கிறார்கள், நித்திரை செய்யவே விரும்புகிறவர்கள். 11 அவர்கள் பெரும் பசிகொண்ட நாய்கள்; அவர்கள் ஒருபோதும் திருப்தியடைவதில்லை. பகுத்தறிவு இல்லாத மேய்ப்பர்கள், அவர்கள் எல்லாரும் தங்கள் சொந்த வழிக்குத் திரும்பி, ஒவ்வொருவனும் தன் சுய இலாபத்தையே தேடுகிறார்கள். 12 ஒவ்வொருவரும் சத்தமிட்டு, “வாருங்கள்; நாம் போய் திராட்சைமது கொண்டுவருவோம்; நாம் மதுவை நிறையக் குடிப்போம், நாளைய தினமும் இன்றுபோல் இருக்கும், அல்லது இதைவிடச் சிறப்பாகவும் இருக்கும்” என்கிறார்கள்.

< ஏசாயா 56 >