< ஏசாயா 46 >

1 பேல் தெய்வம் தலை கவிழ்கிறது; நேபோ தெய்வம் குப்புற விழுகிறது. அவர்களுடைய விக்கிரகங்கள் சுமை சுமக்கும் மிருகங்களால் கொண்டு செல்லப்படுகின்றன; ஊர்வலத்தில் சுமக்கப்பட்ட அந்த விக்கிரகங்கள் இப்பொழுது களைத்துப்போன மிருகங்களுக்கு மிகவும் பாரமாயிருக்கின்றன. 2 அவை ஒன்றாய் குப்புற விழுகின்றன. அந்த உருவச்சிலைகள் தங்களைச் சுமக்கும் மிருகங்களைத் தப்புவிக்கும் ஆற்றலின்றி தாங்களும் சிறைப்பட்டுப் போகின்றன. 3 “யாக்கோபின் குடும்பமே, இஸ்ரயேல் குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களே, நீங்கள் அனைவரும் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் கருவில் உருவானதுமுதல் நான் உங்களைத் தாங்கினேன், நீங்கள் பிறந்ததுமுதல் நான் உங்களைச் சுமந்தேன். 4 நீங்கள் முதிர்வயது அடைந்து, உங்களுக்கு நரைமயிர் உண்டாகும் காலத்திலும், உங்களைத் தாங்கப்போகிறவர் நானே. உங்களைப் படைத்த நானே உங்களைச் சுமப்பேன். நானே உங்களைத் தாங்குவேன், நானே உங்களைக் காப்பாற்றுவேன். 5 “என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? யாருக்கு சமமாக எண்ணுவீர்கள்? என்னை ஒப்பிடுவதற்கு யாரை எனக்கு ஒப்பிடுவீர்கள்? 6 சிலர் தங்கள் பைகளிலிருந்து தங்கத்தை அள்ளிக்கொட்டி, தராசுகளில் வெள்ளியை நிறுக்கிறார்கள்; அதை ஒரு தெய்வமாகச் செய்யும்படி அவர்கள் ஒரு கொல்லனை கூலிக்கு அமர்த்துகிறார்கள்; பின் அவர்கள் தாழ்ந்து வீழ்ந்து அதை வணங்குகிறார்கள். 7 அதைத் தமது தோள்களில் தூக்கிச் சுமக்கிறார்கள். அவர்கள் அதை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்கள். அது அங்கேயே நிற்கிறது, அந்த இடத்திலிருந்து அதனால் நகரமுடியாது. ஒருவன் அதை நோக்கி அழுதாலும் அது பதிலளிப்பதில்லை; ஒருவனை அவனுடைய துன்பங்களிலிருந்து காப்பாற்ற அதனால் இயலாது. 8 “கலகக்காரரே, இதை நினைவில்கொள்ளுங்கள். இதை மனதில் பதித்து வையுங்கள். 9 முந்தி நிகழ்ந்த பூர்வீகக் காரியங்களை நினைத்துப் பாருங்கள்; நானே இறைவன், வேறொருவர் இல்லை; நானே இறைவன், என்னைப்போல் ஒருவரும் இல்லை. 10 நான் ஆரம்பத்திலிருந்தே முடிவை அறிவிக்கிறவர், முற்காலங்களிலேயே வரப்போகிறதை அறிவிக்கின்றவர். ‘என் நோக்கம் நிலைநிற்கும்; நான் விரும்பிய எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன்’ என்று நான் சொல்கிறேன். 11 நான் கிழக்கிலிருந்து இரைதேடும் பறவையை அழைப்பிக்கின்றேன். தூரதேசத்திலிருந்து என் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு மனிதனை அழைப்பிக்கின்றேன். நான் என்ன சொன்னேனோ அதை நிறைவேற்றுவேன்; நான் எதைத் திட்டமிட்டேனோ அதைச் செய்வேன். 12 பிடிவாத இருதயமுள்ள நீதிக்குத் தூரமானவர்களே! எனக்குச் செவிகொடுங்கள். 13 நானே எனது நீதியை அருகில் கொண்டுவருகிறேன், அது வெகுதூரத்தில் இல்லை; எனது இரட்சிப்பு தாமதம் அடையாது. நான் சீயோனுக்கு இரட்சிப்பையும், இஸ்ரயேலுக்கு எனது சிறப்பையும் கொடுப்பேன்.

< ஏசாயா 46 >